20 ஆகஸ்ட் 2012

மழுப்பிய ராஜாவும்; பூசி மெழுகிய கருணாநிதியும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்பாக தவறாகப் பேசவில்லை. சகோதர யுத்தம் தொடர்பாகவே பேசினோம் என்று கருணாநிதியிடம் திமுகவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தனர்.
ஈழத் தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன் என்று ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும் பொதுக்கூட்டத்தில் பேசியதாக ஜூனியர் விகடனில் செய்தி வெளியானது.
இந்தக் கருத்து திமுகவுக்கு உடன்பாடானது இல்லை என்று திமுக தலைமைக் கழகம் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிக்கை வெளியிட்டதுடன், இருவரிடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் என்.கே.கே.பி.ராஜாவும், வி.பி.ராஜனும் ஞாயிற்றுக்கிழமை காலை அறிவாலயத்துக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது இருவரும் கருணாநிதியிடம் விளக்கக் கடிதமும் கொடுத்தனர்.
அதில், சகோதர யுத்தம் தொடர்பாகவே பேசினோம். பிரபாகரன் தொடர்பாக தவறாக எதுவும் பேசவில்லை. பத்திரிகையில் தவறாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
விளக்கத்தைப் பெற்றுக்கொண்ட கருணாநிதி, ஈழப் பிரச்சினை தொடர்பாக தலைமைக் கழகத்தின் கருத்தை மீறி எதுவும் பேசக்கூடாது என்று எச்சரித்ததாகச் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் ராஜா பேசிய ஓடியோ ஆதாரங்கள் எல்லாம் இருக்கும் போது தான் அப்படி பேசவில்லை பத்திரிக்கை தான் தவறாக தகவல் வெளியிடுள்ளது என்று மழுப்பிய ராஜாவை கருணாநிதி அப்படியே பூசி மெழுகியும் விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக