24 ஆகஸ்ட் 2012

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் உலகத் தமிழ்க் கல்வி மாநாடு!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை 2012, ஆகத்து மாதம் 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களில் நடத்துகின்றன. அயல்நாடுகளில் தமிழ் கற்றல் கற்பித்தலில் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகின்றது.
இடம்: கருத்தரங்கக்கூடம், எத்திராஜ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி), சென்னை.
நாள்: 25,26-08.2012(சனி,ஞாயிறு)
நேரம்: காலை 10 மணி முதல்
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் என்ற தமிழ் அமைப்பு கடந்த 37 ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சி நோக்கி உலக அளவில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றது. இந்த அமைப்பும், 65 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி வரும் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை நடத்துகின்றன.
இந்த மாநாட்டில் தொடக்கவிழா, மலர் வெளியீடு, கருத்தரங்கம், ஆய்வரங்கம், இசைநிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகள், சிறப்புரைகள், நிறைவு விழா நடைபெற உள்ளன.
உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரு. இலட்சுமணன் அவர்களும், மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் ஔவை.நடராசன் அவர்களும், முனைவர் பொற்கோ அவர்களும், முனைவர் க.ப.அறவாணன் அவர்களும், முனைவர் ச.முத்துக்குமரன் அவர்களும், துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களும், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதி ராஜா, சிவஞானம் சிரீதரன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
திரு-திருமதி மிக்கி செட்டி (தென்னாப்பிரிக்கா), வி.சு.துரை ராசா(கனடா), வேல். வேலுப்பிள்ளை (அமெரிக்கா), துரை. கணேசலிங்கம் (செர்மனி) ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
மாநாட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.சு.துரைராசா(கனடா), உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி ஆகியோர் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக