13 செப்டம்பர் 2012

தன்மானம் உள்ளவர்கள் இலங்கை தமிழர் பற்றி பேசலாம்",கருணாநிதிக்கு முதல்வர் சாட்டையடி!

இலங்கையின் தமிழினப் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்களருக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது.
துணிச்சல் மிகக் தீர்மானங்கள்:
இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்.
தமிழக அரசின் எதிர்ப்பு:
இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன். இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக வாழ் தமிழர்களும் எனது அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகப் பயணம் போன்றவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சிங்களர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
மெளனியாக மத்திய அரசு- கருணாநிதி மீது தாக்கு:
ஆனால், தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார்.
இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசிற்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடங்களில் மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பினை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர், இலங்கைத் தமிழர்களுக்காக என கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார். இவ்வாறு தமிழர் மானத்தை காப்பாற்றுபவர்தான் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார்.
சர்.பிட்டி தியாகரயரின் தன்மானக் கதை:
தன்மானம் பெரிது என்று வாடிநயன் தான் தமிழன். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இந்தத் தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சர். பிட்டி தியாகராயர் என்ற ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர். பதவிக்காக எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இல்லாதவர். இவர் சென்னை மாநகராட்சியின் மேயராக சில காலம் இருந்தார். அந்த சமயத்தில், வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்திருந்தார். இளவரசரை வரவேற்பதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போதைய கவர்னரான லார்டு வெல்லிங்டன் சர் தியாகராயரைப் பார்த்து, " சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் இளவரசரை முதலில் நீங்கள் தான் வரவேற்க வேண்டும்" என்று கூறினார்.
அதற்கு சர். தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார்.
பின்னர் கவர்னரிடமிருந்து வேறு ஒரு தகவல் வந்தது.
"இளவரசரை சந்திக்கும் போது நீங்கள் கோட், சூட் உடையில் தான் இளவரசரை வரவேற்க வேண்டும்" என்பது தான் அந்தத் தகவல்.
உடனே, சர்.பிட்டி தியாகராயர் அரசாங்கத்திற்கு ஒரு பதில் எழுதினார் . அதில் "என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை இந்த ஆடைகளோடு என்னை இளவரசர் பார்க்க விரும்பினால் நான் அவரை உளமார வரவேற்கிறேன். இந்த ஆடையுடன் நான் அவரை பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை" என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.
அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
அந்த ஆங்கிலேய அரசு பணிந்து வந்து, அவருடைய வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி அளித்தது. சர். தியாகராயர் நடந்து கொண்ட விதம் தான் தமிழனின் தன்மானம். அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருடைய கோரிக்கையை ஏற்றது.
இத்தகைய தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக