30 செப்டம்பர் 2012

விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகுவார்கள்!

இன்று வாய்களை மூடிக் கொண்டிருந்தாலும் இன்னும் 15 வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என சம உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றிய செயற்பாட்டாளர்கள் இதனை கூறியுள்ளனர்.
இங்கு உரையாற்றிய சம உரிமைகளுக்கான அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஜூட் சில்வா புள்ளே:
மக்களை இன, மத, சாதி என பிரித்து ஆட்சி செய்யும் முதலாளித்துவ தேவையை தோற்கடித்து, சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வேண்டும் என்பதை இங்கு வந்துள்ள பலர் ஏற்று கொண்டுள்ளனர்.
இந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள பலர் நாட்டில் பரந்துப்பட்டு வாழ்கின்றனர். நாம் அவர்கள் மத்தியில் செல்ல வேண்டும். தமிழர்களுக்காக போராடும் சிங்களவர்கள், முஸ்லிம்கள், முஸ்லிம்களுக்காக போராடும் தமிழர்கள், சிங்களவர்கள், சிங்களவர்களுக்காக போராடும், தமிழர்கள், முஸ்லிம்கள், இருக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே சம உரிமைகளுக்கான அமைப்பின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய, சம உரிமை அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர் கே. கிருபாகரன், போர் முடிந்த பின்னர், சிங்களவர்கள் வெற்றிப்பெற்றனர், தமிழர்கள் தோல்வியடைந்தனர் என அரசாங்கம் கூறியது. அரசாங்கம் எப்படி அவ்வாறு கூறமுடியும். அனைவரும் தோற்று போய் விட்டனர் என நாம் எண்ணுகிறோம். போர் நடைபெற்ற காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என தெரிவித்தனர். தற்போது போர் முடிந்து விட்டது. ஆனால் போர் நடைபெற்ற காலத்தை விட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
தற்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் கிராமங்களுக்கு சிங்கள பெயர்களை சூட்டுகின்றனர். விகாரைகளை அமைக்கின்றனர். வெசாக், பொசோன் பௌர்ணமி நாட்களில் தானம் வழங்குகின்றனர். நாம் முன்னர் இருந்த காலத்தில் இருந்த பெயர்கள் அந்த கிராமங்களில் இல்லை. சிங்களவர்கள் எவரும் இல்லாத கிராமங்களுக்கு சிங்கள பெயர்களை சூட்டுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமானால், விகாரைகளை அமைப்பதை ஏற்றுக்கொள்ளுமானால், தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது?. அப்படியானால் அதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் பிரச்சினை உள்ளது. அவ்வாறு அங்கு செல்பவர்களில் 75 வீதமானவர்கள் தமிழர்கள். தற்போது போர் முடிந்து விட்டது. சமாதானம் நிலவுகிறது என்றே கூறுகின்றனர். அப்படியானால் ஏன் அவர்கள் செல்கின்றனர். இங்கு (தெற்கில்) போல் அல்ல வடக்கு கிழக்கில், அங்கு ஆட்சி செய்வது இராணுவம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், காவற்துறைக்கு அல்ல இராணுவ முகாமுக்கு சென்றே முறையிட வேண்டும். இராணுவத்தினால் தீர்க்க முடியாது போனால் மாத்திரமே காவற்துறையினரிடம் செல்ல வேண்டும்.
அடுத்தது, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் புகைப்படம் ஒன்றை எடுத்து வீட்டில் மாட்டி வைக்க வேண்டும். இராணுவ அதிகாரி வந்தால், அவர் எங்கே இவர் எங்கே என விசாரிப்பார். இந்த மக்கள் இவ்வாறு இருப்பதை விட வெளிநாடுகளுக்கு செல்வது மேலென நினைக்ககூடும்.
தற்போது, இந்த பிரச்சினையை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என தனித்தனியாக தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் இணைந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் என்னையும் அச்சுறுத்தக் கூடும். எனினும் நாங்கள் இதனை பேச வேண்டும். இன்று நாம் வாய்களை மூடி கொண்டிருந்தால், இந்த நிலைமை தொடரும்.
இன்னும் 15 வருடங்களில் நாங்கள் இருக்க போவதில்லை. அப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு விடுதலைப்புலிகள் யார் என்பது தெரியாது. போர் இருந்ததா என்பதை கூட அறிந்திருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினை தெரியாது. இன்று நாம் வாய்களை மூடிக் கொண்டிருந்தால், இன்னும் 15 வருடங்களில் விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகுவார்கள் எனவும் கிருபாகரன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக