20 செப்டம்பர் 2012

இப்பவாவது வெளியேறிவிடலாமா?: இன்னும் தீவிர யோசனையில் கருணாநிதி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளலாமா? அல்லது என்னதான் மக்கள் விரோத அரசாங்கமாக இருந்தாலும் எப்பவுமே பங்காளி கட்சியாகவே நீடிப்பதா? என்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி "மிகத் தீவிரமாக" ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடியாக விலக்கிக் கொண்டது. இன்று சமாஜ்வாதி கட்சியும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில் திமுக நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக நேற்று முழுவதும் கருணாநிதிக்காக செய்தியாளர்கள் காத்திருந்து பார்த்தனர். அங்கு சந்திப்பார்- இங்கு சந்திப்பார் என்று அழைகழிக்கப்பட்டதுதான் மிச்சம்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்து அறிவித்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கலாம் என்று கருணாநிதி கணக்குப் போட்டிருந்தார். ஆனால் அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
கருணாநிதியைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழு அடைப்பில் கலந்து கொண்டதே மிகப் பெரிய விஷயம் என்பதுதான் அவரது கருத்து. சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு ஆட்சிக் கவிழ்ந்துவிடும் என்று உறுதியாகத் தெரிந்த பின்னர் நாங்களும் ஆதரவை விலக்குகிறோம் என்று அறிவிக்கலாம் என்பதுதான் கணக்கு என்று கூறப்படுகிறது. அதுவரை கருணாநிதி உறுதியாக எந்த ஒரு நிலைப்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றே கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக