27 செப்டம்பர் 2012

மாற்றங்கள் இல்லையேல் கடும் விளைவுகளை இலங்கை சந்திக்கும்!

எங்கும் இராணுவ பிரசன்னமாகவே உள்ளது. நாட்டின் வடபகுதியில் நாம் பார்த்தோம், கிழக்கிலும் பெரும் பகுதிகளில் அதுவே உண்மையாக உள்ளது. மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் எனக் கூறும் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய இராணுவப் பிரசன்னம் நியாயப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. மாற்றத்தை இலங்கை வெளிப்படுத்த வில்லையென்றால் கடுமையான விளைவுகளை அது சந்திக்க வேண்டிவரும்.
இவ்வாறு இலங்கையில் நிலைமைகளை கண்டறியும் கனேடிய அரசின் உத்தியோகபூர்வக் குழுவில் அண்மையில் இங்கு வந்து திரும்பிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர் தெரிவித்துள்ளார்.
கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கை விடயத்தில் பிரதமர் காப்பர், வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெயாட், மற்றும் அரசில் உள்ள ஏனையவர்கள் அதீதமான பல கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அந்தக் கரிசனை இலங்கை குறித்த எமது செயற்பாடுகளில் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் பெருமளவில் இலங்கையில் மதிக்கப்படவில்லை.
அது இல்லாமல் சமாதானம் என்பது சாத்தியப்படாத ஒன்று. எமக்கு கரிசனையுள்ள பல விடயங்கள் குறித்து காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாதவரை எமது நோக்கில் நிலைமைகள் ஏற்புடையதாக இருக்காது.
பொலீஸ் மற்றும் உள்ளுர் சிவில் நிர்வாக்கக்கட்டமைப்புக்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. உள்ளுர் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து காத்திரமான பல அறிக்கைகள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளன. மக்கள் காணாமல் போகின்றனர். மக்கள் ஏதோ ஒரு வழியில் எழுந்தமான தடுப்புக் காவலை எதிர்கொள்கின்றனர் அல்லது எழுந்தமான துன்புறுத்தல்களை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து எதிர்கொள்கின்றனர்.
இந்த விடயங்களை நாம் இலங்கை பயணத்தின் போது எழுப்பினோம். நாங்கள் இது குறித்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம். இது குறித்த நடவடிக்கைகள் குறித்து நீண்ட காலமாக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த கோடையிலும் அரசு ஒரு புதிய செயல்திட்டத்தை வெளியிட்டது. ஆனால் தளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் இது வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலைமை எமக்கு ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லையாயின், எமது கனடிய பிரதமர் அடுத்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தயாரில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளார்.
எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் எதனையும் நாம் இதுவரை காணவில்லை. இலங்கையில் இரு தரப்பிலும் நீண்டகாலப் போரில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் குறிப்பாக தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக 2009இல் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் நடைபெற்ற இறுதிப்போரில் பெருமளவில் தமிழ் மக்கள் கொல்லக்பட்டுள்ளனர். இதில் பலியானவர்களின் குடும்பங்கள், காயமடைந்தோர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் என்ன நடந்தது என்பதை அறிய உரித்துடையவர்கள். யார் இறந்தார்கள்? அவர்களுடைய சடலங்கள் எங்கு உள்ளன?
என்ன நடந்தது? என்பதைக் கண்டறிய எந்தவித காத்திரமான முயற்சிகளும் செய்யப்படவில்லை. இது தமிழர்களுக்கு மட்டும் கடினமான விடயம் அல்ல, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும், சர்வதேச பங்காளர்களுக்கும் இலங்கையின் இருண்ட சரித்திரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர அத்தியாவசியமாகின்றது.
மக்கள் ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும், முழுமையான இயல்புநிலையை எட்ட இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மக்கள் தங்கள் முன்னைய வாழ்விடங்களுக்கு திரும்புகின்ற போது ஒன்றில் அவர்கள் வதிவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது எரிக்கப்பட்டுள்ளன அல்லது காணிப்பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றனர். இது ஒரு வலியுள்ள திரும்புகையாக அமைகின்றது.
இலங்கை விடயத்தில் ஒரு காத்திரமான சர்வதேச அணுகுமுறை இல்லை. கடந்த இலைதளிர் காலத்தில் ஜெனிவாவில் இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு கடுமையான செய்தியை சொல்லியுள்ளது. தொடர்ந்தும் இது குறித்து ஏனையவர்களுடன் பேசவேண்டும்.
மாற்றத்தை இலங்கை வெளிப்படுத்தவில்லையென்றால் கடுமையாளன விளைவுகளைஅது சந்திவேண்டிவரும். நீதியில்லாத சமாதானம் ஒருபோதும் நீண்ட கால அமைதியைக் கொண்டுவராது, அதுவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் கற்றுக்கொண்ட பாடம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக