19 செப்டம்பர் 2012

மஹிந்த,சம்பந்தன் பேசியது இதுதானா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் தனியாக அவசரமாக அழைத்து தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். சம்பந்தனை மஹிந்தராஜபக்ச தனியாகச் சந்திக்கும் சந்திப்புக்களில் கூட்டமைப்பின் சார்பில் வேறெவரும் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில் கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றிய மஹிந்த அவசரமாக சம்பந்தனை அழைத்துச் சந்தித்திருந்தார். இருப்பினும் குறித்த சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
குறித்த அறிக்கையின் பிரகாரம் நேற்றைய அவசர சந்திப்பில் இவை தானா? பேசப்பட்டிருக்கின்றன? என்ற கேள்வி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது. மஹிந்தராஜபக்சவையோ, கோத்தாபய ராஜபக்சவையோ சம்பந்தன் தனிப்பட்ட ரீதியில் சந்திப்பது தொடர்பிலும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையோ புறக்கணிப்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது?
இந்தப் பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடமிருந்து 17 ஆம் திகதி இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு அழைப்பிதழ் ஒன்று வந்தது. அதில் 18 ஆம் திகதி (நேற்று) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தது.
இதற்கிணங்க, 18 ஆம் திகதி (நேற்று) காலை ஜனாதிபதிக்கும், சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் கலந்துகொண்டனர்.
இதில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு இரண்டாமிடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி தம் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொண்டார். இச்சமயத்தில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றிருக்குமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தை ஈட்டியிருக்குமென சம்பந்தன் தெரிவித்துக்கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பெற்றுள்ள ஆணையைக் கருத்திற்கொண்டு இணைந்து ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. அத்துடன், முதலமைச்சர் பதவியை அதற்கு வழங்கவும் முன்வந்தது என்றும் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துக்கொண்டார்.
இத்தகைய ஓர் ஏற்பாட்டை ஐ.தே.கவும் ஆதரிக்கக்கூடுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இச்சமயத்தில் பதிலிறுத்த ஜனாதிபதி, எதிரணியில் அமரவே நான் தயாரானேன். இதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடமும் சுட்டிக்காட்டினேன்.
அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்த விருப்பத்தையும் குறிப்பிட்டேன். எனினும், இப்போது இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன என்றார்.
சம்பந்தன் தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கிழக்கு மாகாணசபைக்கு 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் எத்தகைய தடையோ, பாரபட்சமோ இன்றி சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படமுடியும் என்றும் குறிப்பிட்டார்.
இது நடைபெறாவிட்டால் இது தமிழ் மக்களைத் தண்டனைக்குட்படுத்தும் ஒரு காரியமாகவே அமைந்துவிடும். இதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையின் ஐந்து உறுப்பினர்களைத் திசைதிருப்புவதற்கான நடவடிக்கைகள் கையாளப்பட்டுள்ளன. அரசுப்பக்கம் தாவினால் உங்களுக்கு வாகனங்கள், வீடுகள், பணம், ஒப்பந்தச் சலுகைகள் ஆகியவை வழங்கப்படும் என இவர்களை அணுகிய நபர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள் என்றும் சம்பந்தன் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு அணுகிய நபர்களின் தொலைபேசி இலக்கங்கள், வாகன இலக்கங்கள் ஆகியவற்றின் மூலமாக இவர்கள் இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமே எழுகிறது. அந்த இலக்கங்கள் எம்மிடம் உள்ளன என்றும் சம்பந்தன் விளக்கினார்.
ஜனாதிபதி இக்கூற்றை முதன்முதலாக மறுத்தார். பின்னர் இது குறித்துக் கவனிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொணடார். அதேவேளை, சம்பூர், வலிகாமம் மீள்குடியேற்றத்திட்டங்கள் குறித்தும் சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவிலியன்களை ஆளுநர்களாக நியமித்தல், திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பேசும் சிவில் அதிகாரிகளை அரச அதிபர்களாக நியமித்தல் ஆகியவை தொடர்பாகவும் சம்பந்தன் பிரஸ்தாபித்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறு சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்தார். இதன் முன்னெடுப்புகள் ஆரம்பமானதும், இவ்விடயங்களுக்குத் தீர்வு கண்டுவிடலாமென்றும் குறிப்பிட்டார்.
இதற்குச் சம்பந்தன் பதிலளிக்கையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றக்கூடாது என்ற நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டவேயில்லை. இக்குழுவில் பங்குபற்றுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டுமென்றே கூட்டமைப்பு வலியுறுத்துகிறது எனக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தமது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் இவ்விவகாரங்கள் சம்பந்தமான பேச்சுகளைத் தொடர்வதற்கு இச்சந்திப்பில் இணக்கப்பாடு ஏற்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக