04 செப்டம்பர் 2012

கிழக்கு மாகாணசபை தேர்தல் இறைவன் கொடுத்தவரம் என்கிறார் சம்பந்தன்!

"கிழக்கு மாகாணத் தேர்தலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதை மஹிந்த ராஜபக்ஷ கூட எதிர்பார்க்கவில்லை. இது கடவுளுடைய செயல். நீண்ட காலமாக நாம் துன்பங்களையும், துயரங்களையும் எதிர்நோக்கி வருகின்றோம். இறைவன் எமக்கொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான்.
இதை நாம் உறுதியாகப் பயன்படுத்த வேண்டும். ''என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கக் கோரும் பிரசாரக் கூட்டமொன்று துறைநீலாவணை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் முன்பாக இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
சர்வதேச சமூகத்தின் மேற் பார்வையின் கீழ் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகளைக் கையாளவேண்டிய நிலைமைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் தற்போதைய கிழக்கு மாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தேர்தல் நடைபெறவேண்டிய அவசியமில்லை. ஏறத்தாள ஒரு வருடத்துக்கு முன்பாக இந்தத் தேர்தலை நடத்துகின்றார்கள். இதில் ஒரு கபடமான யோசனை இருப்பது குறித்து மக்கள் அறிவீர்கள்.
கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதன் நோக்கம் குறித்து அரச அமைச்சர்களே பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்கள். சர்வதேச சமூகத்தின் முயற்சிகளைத் தோற்கடிக்க வேண்டும். கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசு வெற்றிபெற்றால், தமிழ் முஸ்லிம் மக்கள் அரசை ஆதரிக்கின்றார்கள். எனவே, சர்வதேச சமூகம் எந்தவிதமான அழுத்தங்களையும் அரசு மீது பிரயோகிக்கத் தேவையில்லை என்பதை வலியுறுத்த முடியும்.
அதற்கு இந்தத் தேர்தலில் அரசு வெற்றிபெறவேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுதான் இந்தத் தேர்தலுடைய பின்னணியாகும். கிழக்குத் தேர்தலின் முடிவை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தலில் அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பினார். அவ்வாறு இணைந்து போட்டியிட்டால் வெற்றி இலகுவானதாகி விடும்.
அந்த வெற்றியைக் காட்டி சர்வதேச சமூகத்தின் முயற்சிகளைப் புறம்தள்ள முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால், முஸ்லிம் மக்களும் மு.காங்கிரஸும் அரசுடன் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை.
அதன் காரணமாகத் தற்போது மு.காங்கிரஸ் தனித்துக் களமிறங்கியுள்ளது. இதனால் நிலைமை முழுமையாக மாறியிருக்கின்றது. அரசு எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாததொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் பே_ம் மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்கவுள்ளனர் என்பதை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குப் போதியதொரு சுயாட்சி தமக்கு வேண்டும் என்கின்ற இலக்கின் அடிப்படையில் வாக்களிக்கப் போகின்றார்களா?
இதன்மூலமாக சர்வதேசத்தின் பங்களிப்பு தமக்குத் தேவை என்றும், அது தொடரவேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கப் போகிறார்களா? அல்லது மஹிந்த ராஜபக்ஷ கூறுவதுபோல் என்னை நம்புங்கள், உங்களில் நான் ஒருவன் என்பதை நம்பி வாக்களிக்கப் போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலளிக்க வேண்டியது நமது மக்களின் கடமையாகும்.
இந்த மாகாணசபை முறைமையானது எங்களுக்குரிய தீர்வென்று நாம் கூறவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் நிறைவேற்றப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் எமக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
கிழக்குத் தேர்தல் தொடர்பில் சர்வதேச சமூகம் பகிரங்கமாகத் தொடர்புபடாது. நாமும் சர்வதேச சமூகத்தின் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்துக்கொண்டிருக்கவும் முடியாது. மக்களும் தமது முடிவுகளின் மூலமாகத் தங்களுடைய விருப்புகளை வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். அதற்கானதொரு சந்தர்ப்பமாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. சர்வதேச சமூகத்துக்கு இதன் மூலம் நாம் தெளிவானதொரு செய்தியை வழங்கமுடியும்.
இன்னும் சில மாதங்களில் வடக்கு மாகாணசபைத் தேர்தலும் இடம்பெறவுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக வெற்றிபெறும். அதன்போது, வடமாகாணமும், கிழக்கு மாகாணமும் இணைந்து பல விடயங்கள் தொடர்பில் ஒருமித்துச் செயற்படக் கூடியதொரு நிலைமை உருவாகவேண்டும். அப்படியென்றால், கிழக்கு மாகாணத்திலும் நாம் வெற்றியீட்டவேண்டும்.
நாம் எவருக்கும் அநீதியிழைக்க மாட்டோம். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை அரவணைத்து, அவர்களின் ஆதரவைப் பெற்று அவர்களும் திருப்தியடையக் கூடிய வகையில்தான் எங்களுடைய முடிவுகளை நாம் எடுப்போம். முஸ்லிம்களுக்கு மாறாகவோ, எதிராகவோ அல்லது அவர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலோ நாம் செயற்படமாட்டோம். நீதியைக் கேட்கின்ற நாங்கள் எவருக்கும் அநீதியை இழைக்க முடியாது.
ஆனால், எமது தமிழ் மக்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழவேண்டும். பாதுகாப்புடன் வாழ வேண்டும். எமது மக்கள் போதிய சுயாட்சியின் மூலமாகத் தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றி, சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த மண்ணில் தொடர்ந்தும் அவர்கள் வாழ வேண்டும். அதற்கு அவர்களுக்கு உரித்துண்டு. அதை எவரும் மறுக்க முடியாது என்றார்.
இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், பொன். செவ்வராசா மற்றும் எஸ். யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேற்படி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோர் துறைநீலாவணை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று சமய வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக