21 செப்டம்பர் 2012

முதலமைச்சை ஐந்து ஆண்டுகளுக்கு அடகு வைத்த ஹக்கீம்! அமைச்சு வேண்டாம் அடம்பிடிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜீப் அப்துல் மஜீத்தே தொடர்ந்து 5 வருடங்களுக்கும் முதலமைச்சராகப் பதவி வகிப்பாரென அரசின் அதிஉயர் மட்டமொன்று நேற்று உறுதிப்படுத்தியது.
கிழக்கு முதலமைச்சர் பதவி எக்காரணம் கொண்டும் பங்கீடு செய்யப்படமாட்டாதென்றும் அவ்வுயர் மட்டம் சுட்டிக்காட்டியது. கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு, முதல் இரண்டரை வருடங்களுக்குத் தற்போதைய முதலமைச்சர் நஜீப்பும், மீதி இரண்டரை வருடங்களுக்கு மு.கா. உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்படுவர் என வெளிவரும் தகவல்கள் இந்த அறிவிப்பையடுத்து முடிவுக்கு வருகின்றன.
கிழக்கு முதல்வராக மீதி இரண்டரை வருடங்களும், மு.கா. தனது கட்சி மாகாணசபை உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமதை முன்மொழிந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இது தொடர்பில் ஏற்கனவே மு.கா. தலைவருக்கு உத்தியோக பூர்வமாக அரசு எடுத்துக்கூறியிருப்பதாகவும், அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அரச உயர்மட்டம் பிரத்தியேகமாகச் சுட்டிக்காட்டியது.
கிழக்கு மாகாணசபையில் மு.காவுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளை மட்டும் வழங்குவது குறித்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதை விடுத்து வேறு எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அந்த உயர்மட்டம் குறிப்பிட்டுக்காட்டியது.
மாகாண முதலமைச்சர்களாக சு.க. சார்பானவர்களே நியமிக்கப்படுவர் என்பது சு.கவின் கொள்கை என்றும் இது அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்த விடயமென்றும் அந்த உயர்மட்டம் மேலும் சுட்டிக்காட்டியது.
அதேவேளை, கிழக்கு அமைச்சரவையில் தமிழர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக அரசு அதி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது எனத் தெரியவருகின்றது.
தமிழர் சார்பில் அமைச்சரவையில் ஒருவர் அங்கம் வகிப்பதன் அவசியத்தை கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், அரசிடம் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும், அமைச்சுப் பதவியை தான் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உறுதியாக அரசிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக