02 செப்டம்பர் 2012

மேலாதிக்க சக்திகளை எதிர்த்து நிற்க முடியும் என ஈரானும் இலங்கையும் நிரூபித்துள்ளனவாம்?!

மேலாதிக்க சக்திகளை எதிர்த்து நிற்க முடியும் என்பதை ஈரானும் இலங்கையும் நிரூபித்துள்ளதாக ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தாம் தோற்கடிக்கப்பட முடியாதவை என காட்டுவதற்கு மேலாதிகக்க சக்திகள் முனைந்தன. ஆனால் அவற்றை எதிர்த்து நிற்பது சாத்தியம் என்பதை ஈரானும் இலங்கையும் நிரூபித்துள்ளன என ஈரானிய ஆன்மீகத் தலைவர் கமேனி கூறினார்.
சர்வதேச அரங்கில் வலுவாக இருப்பதற்கும் பரந்த நலன்களை பாதுகாப்பதற்கும் முஸ்லிம் நாடுகளுக்கிடையில் நெருங்கிய நட்புறவு வளர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பலஸ்தீன நாட்டிற்கு இலங்கை அளிக்கும் ஆதரவுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தை மதிப்பதற்காகவும் இலங்கையை அவர் பாராட்டினார். ஈரானுடன் உறவுகளை விருத்தி செய்வதில் இலங்கை ஜனாதிபதி காட்டும் ஆர்வத்தையும் அவர் வரவேற்றார்.
அணி சேரா மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஈரானிய ஆன்மீக தலைவர் முன்வைத்த அணுவாயுதமற்ற மத்திய கிழக்கு யோசனை மற்றும் பலஸ்தீனம் தொடர்பாக அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் போர் மற்றும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் உரிமைகளை பேணுவதற்கான முயற்சிகள் ஆகியவற்றை ஜனாதிபதி விளக்கினார். 'உங்கள் உதவிகள் மூலம் பல பிரச்சினைகளை நாம் வெற்றிகொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்' எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக