14 செப்டம்பர் 2012

அடுத்த வருட தொடக்கத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் - அமெரிக்கா எச்சரிக்கை!

றொபேட் ஓ பிளேக்
சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச் சரிக்கை விடுத்திருக்கிறது.
கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை றொபேட் ஓ பிளேக் நேற்றுக்காலை கொழும்பு ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்தார். இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிஸெனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.
மீள்குடியேற்றம், தேசிய நல்லிணக்கம் மற்றும் நிரந்தர அமைதித் தீர்வொன்றை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு அக்கறையின்றி இருப்பதாகவும், இதனால் தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கையிழந்து விரக்தியான நிலைக்குச் சென்றிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பேச்சுமேசைக்கு வருவதற்கு கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றபோதிலும், அரசுக்கு அதில் போதிய ஆர்வமில்லாமல் இருப்பதை அவர்களின் செயற்பாடுகளிலிருந்து அறியமுடிகின்றதென்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் மேலும் இங்கு எடுத்துக்கூறியிருக்கின்றனரெனத் தெரிகிறது.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ரொபர்ட் ஓ பிளேக், இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் அமைதி முயற்சிகள் பற்றியும் அமெரிக்கா உன்னிப்புடன் அவதானித்துவருவதாகவும், இந்த நிலைமை தொடருமாயின் அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுமென்றும் தெரிவித்திருக்கிறாரென அறியமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக