03 ஜனவரி 2013

பிரதம நீதியரசரை தண்டிக்கும் சட்ட அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை!

பிரதம நீதியரசரை குற்றவாளி என அறிவித்து அவரை தண்டிக்கும் சட்ட ஆணை, அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு சட்ட அதிகாரம் கொண்டதல்ல என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ள வியாக்கியானத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான ஸ்ரீஸ்கந்தராஜா, அனில் குணரத்ன, டபிள்யு.சலாம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உயர் நீதிமன்றின் வியாக்கியானம் வெளியிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு விசாரிக்கப்படுகின்றமை நீதிபதியின் உரிமை மற்றும் நீதிமன்ற கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை சட்ட அதிகாரம் உள்ள நிறுவனமே விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழு அரசியல் அமைப்பின் 107 (1) சரத்தின் கீழும் 78 (ஏ) என்ற பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழும் அமைக்கப்பட்ட ஒன்று என்பதால் அதற்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றின் மூலம் பாராளுமன்ற தெரிவுக்குழு இரத்து செய்யப்படும் என்ற அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக