24 ஜனவரி 2013

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டாம் -கனடா !

இலங்கையில் பொது நலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் பொதுநலவாய தலைமைச் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் கனேடிய அரசால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு (Commonwealth ministerial action group) அவசர கூட்டமொன்றை நடத்த முடிவுசெய்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இந்தவருடம் நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுமென முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கனடாவின் இந்தத் திடீர் நடவடிக்கையால் மேற்படி கூட்டத்தை லண்டனில் கூட்டி இறுதி முடிவை எடுக்க பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு தீர்மானித்துள்ளது.
CMAG எனப்படும் மேற்படி குழுவிடம் இலங்கை தொடர்பில் காட்டமான முறைப்பாட்டை முன்வைத்திருக்கும் கனடா, இலங்கையில் ஜனநாயகமற்ற ஒரு சூழ்நிலை நிலவுவதால் அதனை வேறொரு அங்கத்துவ நாட்டில் நடத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளது.
இலங்கையில் இம்மாநாடு நடைபெறுமானால் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் மாநாட்டைப் புறக்கணிக்கும் அபாயம் இருப்பதையும் கனடா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பின்னணியில், லண்டனில் கூடவுள்ள பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு இலங்கை தொடர்பான விசாரணைகளை நடத்தினால் அதற்கு சில கால அவகாசம் எடுக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் விசாரணைகள் நடைபெறும் காலப்பகுதியில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் வாக்களிப்பதற்கான தகைமையை இலங்கை தற்காலிகமாக இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகக் கூடும்.
இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மாநாட்டை இலங்கையில் நடத்தாதிருக்க பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தீர்மானத்தை எடுக்கும் வாய்ப்பே அதிகமென விடயமறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள செயலர் கமலேஷ் சர்மா, இலங்கையின் நிலைவரங்களைப் பார்வையிட்டு பேச்சுகளை நடத்தி இறுதியான முடிவுக்கு வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் பொதுநலவாய தலைமைச் செயலகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மட்டக்குழு:
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழுவில் கனடா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜமெய்க்கா, சியராலியோன், தான்சானியா, ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ, வனூட்டு, மாலைதீவு ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கின்றன.
பொதுநலவாய அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்படும் நாடுகளை அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து நீக்குவதற்கு மேற்படி அமைச்சர் மட்ட நடவடிக்கைக் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
1995ஆம் ஆண்டு நியூஸிலாந்து ஒக்லண்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் மேற்படி அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக