27 ஜனவரி 2013

தமிழுக்காக போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான் - சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:
தமிழ் படித்தால் மட்டுமே வேலை, தமிழில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற நிலை மிக விரைவில் வரும். நாங்கள் தமிழுக்காக போராடுவது அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழை காக்கவே தவிர, மற்ற மொழிகளை அழிப்பதற்காக அல்ல, தமிழ் இனத்தில் பிறந்து தமிழுக்காக போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான்.
தமிழை வளர்க்கவும், தமிழ் இனத்தை அழியாமல் காக்கவும் வேறு ஒரு தலைவர் தமிழ் இனத்தில் இருந்தது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு தமிழ் மொழியை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு தேவை எல்லாம் தமிழர்களை ஆள வேண்டும் என்பதே.
தாய்மொழியாக இருந்த தமிழ், பாடமொழியாகி தற்போது விருப்ப பாடமொழியாக இருப்பது மிகவும் வருத்தப்பட கூடிய விஷயமாகும். எந்த மொழியில் பேசுகிறீர்களோ அதை முழுமையாக பேசுங்கள். பேசும் மொழியில் மற்ற மொழிகளை இணைத்து அந்த மொழிகளை களங்கப்படுத்தாதீர்கள்.
தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவி மோகத்திற்காக மத்தியில் உள்ள கட்சிகளுடன் எப்போது கூட்டணி வைத்தார்களோ அப்போது இருந்தே தமிழ் மொழி அழிய தொடங்கிவிட்டது. எனவே தமிழையும், தமிழ் இனத்தையும் வாழ வைப்பதற்காக இளைய தலைமுறையினர் வரவிருக்கும் வரலாற்று புரட்சிக்கு தயாராக இருக்க வேண்டும்.
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனி தெலுங்கானா அமைத்து கொண்டதை போல நாங்களும் தனி தமிழ்நாடு அமைத்து கொள்கிறோம்.
இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் கற்றால்தான் வேலை என்ற நிலை வரும். தமிழ்மொழி தமிழர்களுக்கு தாய்ப்பால் போன்றது.
மற்ற மொழிகளை கற்று கொள்ளுங்கள் ஆனால் தாய்மொழி தமிழை தாய்ப்பால் போல பருகுங்கள் அப்போதுதான் அடுத்த தலைமுறையில் தமிழ்மொழி வளரும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக