27 ஜனவரி 2013

கொமன்வெல்த் மாநாட்டு வாய்ப்பு பறிபோவதைத் தடுக்கும் அவசர முயற்சிகளில் சிறிலங்கா!

கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பு சிறிலங்காவிடம் இருந்து பறிக்கப்படலாம் என்று எழுந்த அச்சத்தை அடுத்து, அதனைத் தடுத்து நிறுத்தும் அவசர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன, அவசர அவசரமாக, கடந்தவாரம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு முன்னதாக, சிறிலங்கா விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கனடா அழுத்தம் கொடுத்து வருகிறது.
கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்தக் கூடாது என்று கனடா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த வாய்ப்பு பறிபோய் விடுமோ என்று சிறிலங்கா அரசாங்கம் கலக்கமடைந்துள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன கடந்தவாரம் அவசரமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி மஜிந்த ஜெயசிங்கவுடன் இணைந்து அவர், கடந்த வியாழக்கிழமை கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மாவை சந்தித்து நீண்டநேரம் உரையாடினார்.
எனினும், கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டால், கொமன்வெல்த் செயலரால் சிறிலங்காவை காப்பாற்ற முடியாது என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில், அவுஸ்ரேலியா, பங்களாதேஸ், கனடா, ஜமைக்கா, சியராலியோன், தன்சானியா, ரினிட்டாட் அன் டுபாகோ, வனாட்டு, மாலைதீவு ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
அதேவேளை பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட்டையும் சஜின் வாஸ் குணவர்த்தன சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் லண்டனில் உள்ள பார்க் விடுதியில் கடந்த புதன்கிழமை மாலை சுமார் 15 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து விருந்து கொடுத்த சஜின் வாஸ் குணவர்த்தன, அவர்களை சிறிலங்காவுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரியுள்ளார்.
இதற்கிடையே, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா அடுத்த மாதம் 10ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெலத் தலைவர்களின் உச்சி மாநாடு தொடர்பாக கலந்துரையாடுவதற்கான வழக்கமான பயணமே இது என்று சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு வரும் கமலேஸ் சர்மா சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களின் போது. கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்தும் முடிவுக்கு எதிரான கனடா தலைமையிலான நாடுகளின் முயற்சி குறித்து கலந்துரையாட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராய உடனடியாக கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு கொமன்வெல்த் அமைப்பிடம் கனடா கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக