02 ஜனவரி 2013

சர்வதேசத்தின் தலையீடு இன்றி தீர்வு இல்லை: சுரேஷ் பிரேமசந்திரன்

சர்வதேச சமூகத்தால் மட்டுமே ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர முடியும். அதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,
சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிரும் ஆற்றல் இன்மையையும் விருப்பமின்மையையும் அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது முடியாத காரியமாகும்.
சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்வதில் அரசாங்கம் உண்மையான அக்கறையுடன் இருக்குமாயின் அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தையோ அல்லது திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தையோ கொண்டுவந்திருக்காது என்றார்.
அரசியல் தீர்வை உருவாக்குவதற்காக அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றுமா? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பிரதம நீதியரசருக்கு நடந்ததை பார்த்ததன் பின்னர் பகுத்தறிவுள்ள எவரும் இவ்வாறான செயன்முறைகளை நம்பமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக