30 டிசம்பர் 2010

பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிக்க தடை!

பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு சில ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இன்று சாட்சியங்களை திரட்டியிருந்தனர்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த சில ஊடகவியலாளர்களுக்கு தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பி.பி.சீ ஊடகவியலாளர் மற்றும் உள்நாட்டு ஊடகவிலாளர்கள் சிலருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி அத்துகொடவின் அழைப்பிற்கு அமைய, தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்லவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஊடகவியலாளர்கள் பூசா தடுப்பு முகாமிற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பு முகாமில் கடயைமாற்றி வரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனுமதி மறுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன்போது, ஊடகவிலயாளர்கள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி. அத்துகொடவுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அத்துகொட தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் அல்லது காவல்துறை மா அதிபர் ஆகியோரில் ஒருவரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக