11 டிசம்பர் 2010

இசைப்பிரியா படையினராலேயே கொல்லப்பட்டார்!

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக தற்போது வெளியான வீடியோவில் இருக்கும் பெண்ணை விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியில் பணிபுரிந்த இசைப்பிரியா என்று தாம் அடையாளம் கண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியிருந்தது.
இவர் கொல்லப்பட்டதற்கு இலங்கை இராணுவத்தின் 53 ஆவது டிவிஷன்தான் பொறுப்பு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியிருந்தது.
இது தொடர்பாக ஹூமன் ரைட்ஸ் வாட்சின் சட்ட இயக்குனர் ஜிம் ராஸ் அவர்கள் தமிழோசையிடம் கூறும் போது, 'இலங்கை பாதுகாப்பு அமைச்சு 53 ஆவது டிவிஷன் மே 18 ஆம் தேதியன்று கொல்லப்பட்டதாக கூறியிருந்த நபர்தான் இந்த வீடியோவில் கொல்லப்பட்டதாகத் தோன்றும் நபராக இருப்பதாக கருதுகிறோம். அரசு இவரது மரணத்துக்கு 53 ஆவது டிவிஷன்தான் காரணம் என்று கூறியிருந்ததால் நாங்கள் இந்த கொலையோடு 53 ஆவது டிவிஷனைத் தொடர்பு படுத்துகிறோம். பிரிட்டனின் சனல் 4 ம் - எங்களிடம் உள்ள புகைப்படங்களும் சம்பவம் குறித்த ஆதாரங்களாக இருக்கின்றன.' என்றார் அவர்.
இந்த சம்பவம் இராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான் நடைபெற்றுள்ளது என்பதை எவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
இராணுவ படி நிலையை ஆராய்ந்து கிரிமினல் குற்றத்துக்கு இராணுவ கமாண்டர்கள் பொறுப்பா என்பதையெல்லாம் கிரிமினல் விசாரணையில் தான் வெளிக் கொண்டுவர முடியும். நாங்கள் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை ஒரு குறிப்பிட்ட இராணுவ படையணியுடன் தொடர்பு படுத்தியுள்ளோம். இந்த சம்வத்துக்கு யார் பொறுப்பு எந்த அளவுக்கு பொறுப்பு என்பதை அடுத்து ஆராய வேண்டும். இராணுவ கமாண்டர்கள் இது குறித்து தெரிந்து செயல்படாமல் இருந்தார்களா என்பதையெல்லாம் ஆராயவேண்டும்..அடுத்து இதைச் செய்ய வேண்டும்.ஆனால் இப்போது இது குறித்து நாங்கள் எவ்வித முடிவுக்கும் வரவில்லை' என்றும் கூறினார் ஜிம் ராஸ்.
போர் குற்றங்களில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ன செய்ய போகின்றது என்று கேட்ட போது, இது மிகவும் சிக்கலானது. பல நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஐசிஜே எனப்படும் சர்வதேச நீதிமன்றம் நாடுகளுக்கிடையேயான சிவில் பிரச்சனைகளைத் தான் கவனிக்கிறது.
இது போன்ற விடயங்கள் அதன் கீழ்வராது. சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் இதைவிசாரிக்க முடியாது. ஏனென்றால் அந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு கட்டுப்படும் உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்திடவில்லை. இந்நிலையில் ஜ நாவின் பாதுகாப்பு சபை பரிந்துரை செய்தால் தான் இந்த வழக்கை சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரிக்க முடியும்.
மனித உரிமைகள் அமைப்பு என்ற முறையில் மனித உரிமைகள் மீறல் குறித்த பல்வேறு தகவல்களை ஆவணங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். இதை நாங்கள் பல்வேறு அரசுகளுக்கும் ஐ நா போன்ற அமைப்புக்களுக்கும் கொடுக்கிறோம். இது தொடர்பில் அமெரிக்க. ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற நாடுகள் மேலும் பலமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.
இலங்கையில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை வேண்டும் என்று இவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.'
என்றார் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் சட்ட இயக்குனர் ஜிம் ராஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக