15 பிப்ரவரி 2013

உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் அட்டகாசம்!

வலி.வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் நுழைந்து ஊடகவியலாளர்களின் கமராக்களை அடித்து நொருக்கியதுடன் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வலி.வடக்கில் தமது நிலங்களை விடுமாறு கோரி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் போது போராட்ட இடத்திற்குள் நுழைந்த இராணுவ சீருடை அணிந்தவர்கள் உதயன் இணையத்தள ஊடகவியலாளர்களின் கமராவினை அடித்து நொருக்கியதுடன் கமராவையும் பறித்து சென்றுள்ளனர்.
அத்துடன் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் போராட்டம் முற்றுப்பெறாது தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் சில மணித்தியாலங்களில் அவர் வெளியேறியதும் போராட்ட இடத்தில் உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் கலந்து கொண்டிருந்த மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு தாக்கியுள்ளனர். மக்கள் குறித்த நபர்களைப் பிடித்து காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
எனினும் அவர்கள் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டதனையடுத்து இராணுவத்தினர் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
அதனையடுத்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இராணுவ சீருடையுடன் நுழைந்தவர்கள் உதயன் இணையத்தள ஊடகவியலாளர்களின் கமராவினை அடித்து நொருக்கியதுடன் அதனையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தினையடுத்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார் என தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக