07 பிப்ரவரி 2013

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தமிழக சட்ட சபையில் கடும் வாய்ச்சண்டை!

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தமிழக சட்ட சபையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கடும் வாய்ச்சண்டைசட்டசபையில் இன்று (07) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) பேசியதாவது:-
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதில் ஏற்படும் இழப்புகளுக்கு இலங்கை அரசிடம் நஷ்டஈடு பெறும் வகையில் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் கடந்த முறை தீர்மானம் கொண்டு வந்தபோது, மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அந்த தீர்மானத்தின் கருத்துக்களை வலுவிழக்கச் செய்து ஆதரித்தது.
இந்தமுறை கொண்டுவரும் தீர்மானம் உறுதியானதாக இருக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எந்த அதிகார பகிர்வும் தரமாட்டேன் என்று ராஜபக்ஷ ஆணவமாக பேசி இருக்கிறார். ஆனால் இந்தியா வரும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அது இலங்கை தமிழர்களின் ரத்தத்தை குறிக்கிறது.
ரங்கராஜன் (காங்):- இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டதில்லை.
அமைச்சர் நத்தம் விசுவநாதன்:- இலங்கை தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ஷ செயல்பட்டதில் காங்கிரசுக்கு பங்கு உண்டு. அதற்கு தி.மு.க.வும் உதவுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்- அமைச்சர் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியும், நேரில் பேசியும் அதை மத்திய அரசு இன்னும் தீர்க்கவில்லை.
கடந்த ஆட்சியில் முதல்- அமைச்சராக இருந்தவர் பேசும்போது, சில பேராசை பிடித்த மீனவர்களால்தான் பிரச்சினை ஏற்படுகிறது என்றார். இது இப்போதும் சட்டமன்ற குறிப்பில் உள்ளது.
செங்கோட்டையன் (அ.தி.மு.க.):- முன்னாள் முதல்-அமைச்சர் 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் பிரச்சினை தீர்ந்து விட்டதாக வாபஸ் பெற்றார். இதையடுத்து அங்கு குண்டு மழை பொழிந்து 80 ஆயிரம் பேரை கொன்று குவித்தனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்.
அமைச்சர் கே.பி.முனுசாமி:- எப்போதும் எல்லா காலத்திலும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. ராஜபக்ஷவிடம் விருந்து சாப்பிட்டு பரிசு பெற்றவர்களில் இவருடைய தலைவர் மகள் கனிமொழியும் உண்டு.
சக்கரபாணி (தி.மு.க.):- 1983-ல் இருந்தே இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இலங்கை தமிழர்களை ஆதரித்ததால் ஆட்சியை இழந்தது. பிரபாகரன் குற்றவாளி. அவரை கைது செய்ய வேண்டும் என்று சொன்னது நீங்கள், போர் நடந்தால் அப்பாவி மக்கள் இறப்பார் என்று சொன்னது நீங்கள்.
அமைச்சர் கே.பி.முனுசாமி:- புரட்சித்தலைவி எப்போதும் தீவிரவாதத்தை ஏற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை. இலங்கை தமிழர்களை எப்போதும் ஆதரித்து வருகிறார். ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலை என்று இலங்கை தமிழர் பிரச்சினையில் நடந்து கொள்கிறீர்கள்.
நீங்கள் ஆட்சியில் இருந்த போது இந்தியா சார்பில் ஒரு எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. அதில் கனிமொழியை இடம்பெற வைத்து 3-ம் தர அரசியல் நடத்தியது உங்கள் தலைவர்.
தங்கம் தென்னரசு கூறியதாவது:- இலங்கை பிரச்சினை தொடர்பாக வேண்டும் என்றே குற்றச்சாட்டுகளை தி.மு.க. மீது சுமத்துகிறார்கள். அதற்கு மறுத்து பேச எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை. தி.மு.க. தலைவரை 3-ம் தர அரசியல்வாதி என்று மிகவும் கேவலமாக விமர்சனம் செய்கிறார்கள். இதைக்கேட்டால் பேப்பர் கட்டுகளை தூக்கி வீசினார்கள். உண்மையை சொல்ல வாய்ப்பு அளிக்காமல் வெளியேற்றினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக