06 ஜூலை 2010

பார்வதி அம்மாள் சிகிச்சையை தள்ளி வைத்துள்ளதாக மத்திய அரசு விளக்கம்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வர்களின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறும் முடிவை தள்ளிவைத்திருக்கிறார் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பாலசுப்பிரமணியம், கந்தவேலு விஸ்வநாதன் ஆகியோர் கடந்த மே மாதம் 11ந் தேதி கொழும்புவில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த பார்வதி அம்மாளை சந்தித்து பேசினார்கள்.
அவர் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றும், அவருடைய மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்க முன்வந்திருக்கிறது என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அவர் பேச முடியாத நிலைமையில் இருந்தார். அவருடன் இருந்த ஆர்.சம்பந்தன் எம்.பி. மறுநாள் அவர்களை சந்தித்து பேசினார். தற்சமயம் இந்தியா வந்து சிகிச்சை பெறும் முடிவை பார்வதி அம்மாள் தள்ளிவைத்திருக்கிறார் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் விளக்கத்தை கேட்ட சென்னை ஐகோர்ட், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக