28 ஜூலை 2010

மகிந்தவின் அழைப்பினால் இந்திய அதிகாரி வருகிறார்,கருணாநிதியின் வேண்டுகோளால் அல்ல.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது.
பாதுகாப்பு விவகாரத்துக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
இந்தியப் பிரதிநிதிகளை அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழக முதல்வர் கருணாநிதி மூலமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே சனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இந்த வேண்டுகோளை விடுத்தார். இதன் படியே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். அரசு ஒருபோதும் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இது விடயத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். என்றார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் பதில் அளித்தார்.
புலிகளின் முக்கிய தலைவர்களின் மனைவியர் உட்பட சுமார் 8,000 விதவைகள் வடக்கு, கிழக்கில் வாழ்கின்றனர் என்றும் இவர்கள் தம்மிடம் உதவி கோரியதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இருந்தும் அவரினால் பெயர் குறிப்பிடப்பட்ட புலிகளின் தலைவர்கள் இருவரும் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்று முன்னர் அரசு தெரிவித்திருந்தது. அவர்களது நிலை என்ன? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு அடுத்த வாரம் பதில் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக