26 ஜூலை 2010

அகதிகளுடன் சென்ற கப்பல் பற்றி தகவல் இல்லை!



இலங்கை அகதிகளுடனான எம் வீ சன் சீ கப்பல் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றது என்பது குறித்த தகவல்களை அறியமுடியாதிருப்பதாக கனேடிய செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தத் தகவல்களை வழங்க கனேடிய மற்றும், அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருவதாக ஊடகங்கள் சில குற்றம் சுமத்தியுள்ளன.
219 இலங்கை அகதிகள் மற்றும் 13 இந்திய தமிழ் அகதிகளுடனும் செல்லும் இந்த கப்பல், தற்போது கனடாவை அண்மித்துள்ளதாக முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
எனினும், தற்போது இந்த கப்பல் குறித்த ஊடக செய்திகளை மாத்திரமே அவதானித்து வருவதாக கனடாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே மாதிரியான தகவல்களையே ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரிகளும் வழங்கி வருவதாக கனேடிய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த கப்பல் குறித்த தகவல்களை வெளியிட கூடாது என்ற உத்தரவுக்கு இணங்க, இது தொடர்பில் தகவல் வழங்க முடியாதுள்ளதாக அமெரிக்க கடற்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த வெள்ளிக்கிழமை, குறித்த கப்பல் தாய்லாந்தின் கொடியுடன், பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகம் நோக்கி வருகின்றமையை அமெரிக்க கடற்துறை அதிகாரி எடம் ஸ்டன்டொன் உறுதிப்படுத்தி இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக