04 ஜனவரி 2012

ஒபாமாவே வந்தாலும் அதிகாரப்பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே வந்தாலும் சிறிலங்காவில் அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள முடியாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே கலாநிதி குணதாச அமரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
“ 13வது அரசியலமைப்புத் திருத்தத்தில் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறிலங்கா அரசுக்குள் இருப்பவர்களில் 60 வீதமானோர் சூழ்ச்சிக்காரர்களே. சிறிலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் பாரிய சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது.
இதற்குப் பிரதான காரணம் உள்வீட்டுச் சதியே. அரசியல்தீர்வுக்கு அதிகாரப் பகிர்வை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
அரசியலமைப்பில் இருந்து 13வது திருத்தச் சட்டத்தையே நீக்க வேண்டும். நாட்டில் இனவாதம் உள்ளது என்பது போலியான மாயையாகும். எனவே தேவையற்ற விடயங்களை பேசுவதில் பயனில்லை.
இன்று நாட்டை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல சக்திகள் செயற்படுகின்றன.
13வது திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி அனைத்துலக சமூகம் அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளன“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக