08 ஜூலை 2012

கைதிகளை தாக்க கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட 25காடையர்கள்!

வவனியா சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது தாக்குதலை நடத்துவதற்காக 3 அதிகாரிகள் உட்பட 25 சிறைக் காவலர்கள் கொழும்பிலிருந்து விஷேடமாக வவுனியாவுக்கு அவசரமாக அனுப்பப்பட்டார்கள் என்ற அதிச்சிச் செய்தி இப்போது வெளியாகியிருக்கின்றது. அதிரடிப்படையினரும், இராணுவமும் தமது தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு பணயமாக வைக்கப்பட்டிருந்த சிறை அதிகாரிகளை மீட்ட பின்னர் தமிழ்க் கைதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது.
கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில், மண்வெட்டிப் பிடிகளாலும், சைக்கிள் செயின்களாலும் இவர்கள் தாக்கப்பட்டனர். இதற்காக வவுனியா சிறைச்சாலைக்கு அருகேயிருக்கும் கடைகளிலிருந்து 50 க்கும் அதிகமான மண்வெட்டிப்பிடிகள் அவசரமாக வாங்கப்பட்டன. இதன்மூலம் வவுனியா சிறையிலும், பின்னர் அநுராதபுரம் சிறையிலும் இரத்தக்களரி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் கைதிகளில் ஒருவர் கொல்லப்பட, இருவர் கோமா நிலையில் உள்ளனர். சுமார் இருபது இளைஞர்களின் கால்கள் கைகள் உடைக்கப்பட்டுள்ளன.
வவுனியா சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தையடுத்து விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பான விவகாரம் மீண்டும் அனைவருடைய கவனத்தையும் பெற்றிருக்கின்றது. இவ்வளவும் நடந்திருக்கும் நிலையில் தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படுமா என்ற கேள்விதான் அரசியலில் பலமாக எழுப்பப்படுகின்றது. கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த மூன்று விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்பதைத்தான் இப்போதும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றதே தவிர அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சிறைச்சாலைகள்தான் இன்று பாதுகாப்பற்ற இடங்களாகியுள்ளன. சரியாக 29 வருடங்களுக்கு முன்னர் 1983 ஜூலையில் அதிக பாதுகாப்படன் கூடிய கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் மறந்துவிடக்கூடியவையல்ல. 53 தமிழ்க் கைதிகள் அப்போது அங்கு வைத்துக் கொல்லப்பட்டார்கள். இதுபோல பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம படுகொலைகள் போன்ற சம்பவங்கள் சிறைச்சாலைகளில் கூட தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வகையில் இப்போது மற்றொரு ஜூலையில் நிமலரூபன் கொல்லப்பட்டிருக்கின்றார். பலர் முடமாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அரச தரப்பிலிருந்து இதற்கு சரியான பதில் சொல்லப்படவில்லை. பிரச்சினை இப்போது சர்வதேசத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
போர் முடிவுக்கு வந்து மூன்றுவருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ்க் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் முன்வைக்கவில்லை. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் வெறுமனே சந்தேகத்தின்பேரில் கைதானவர்கள்தான். வேறு சிலர் சிறிய அளவிலான உதவிகளை விடுதலைப் புலிகளுக்குச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்கள். இவர்களில் அனேகமானவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களே இல்லை. வழக்குத் தாக்கல் செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாமையால் பலர் தடுப்பு முகாம்களில் சும்மா வைக்கப்பட்டுள்ளார்கள்.
இருந்த போதிலும், இவர்களை விடுதலை செய்வதற்கு எந்தவிதமான செயன்முறையையும் அரசு கொண்டிருக்கவில்லை. கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் அதனை நிறுத்துவதற்காக ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுப்பது என்பதற்கு அப்பால் அரசாங்கம் எந்த ஒரு நகர்வையும் முன்னெடுக்கவில்லை. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு தன்னுடைய பரிந்துரைகளில் கூட இந்த தமிழ்க் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றது.
மே மாதம் தமது விடுதலையை வலியுறுத்தி கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தீவிர நிலையை அடைந்திருந்த கட்டத்தில் மீண்டும் ஒரு வாக்குறுதியை அரசாங்கம் வழங்கியது. அரசாங்கத்தின் வாக்குறுதியைக் காவிக்கொண்டு மகசின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வவுனியா சிறைச்சாலைச் சம்பவம் இடம்பெற்ற போது காணாமல் போய்விட்டார். ஒரு மாத காலத்தில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திரன் தெரிவித்த நிலையிலேயே கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள்.
ஆனால், ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் கைதிகளின் விடுதலைக்காக எவ்வாறான நடவடிக்கைகளை சுமந்திரன் முன்னெடுத்தார் என்பது தெரியவில்லை. இருந்தபோதிலும், ஒரு மாத காலக்கெடு முடிவடைந்த நிலையில் வவுனியாவிலுள்ள சிறைக் கைதிகளை அநுராதபுரத்துக்கும் பூசாவுக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில்தான் வவுனியா சிறைச்சாலைச் சம்பவம் இடம்பெற்றது.
தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள். அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களை வவுனியாவுக்கு மீண்டும் கொண்டு வாருங்கள் என்பதுதான் அவர்களுடைய பிரதான கோரிக்கையாக இருந்தது. உண்ணாவரதத்தைக் கைவிடச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பலாத்காரமாக அதனைச் செய்வதற்கு சிறை அதிகாரிகள் முற்பட்டபோதே மூன்று சிறை அதிகாரிகளை கைதிகள் சிறைப்பிடித்ததாகக் கூறப்படுகின்றது.
கைதிகளின் இந்த வன்முறை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்பது உண்மைதான். இருந்த போதிலும் இந்தப் பிரச்சியையை ப+தாகரமாகக் காட்டிய அரசாங்கம் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்பாக படைகளைக் குவித்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் பின்னர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட கைதிகள் தாக்கப்பட்டதாக கைதிகளை நேரில் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கூறுகின்றார்கள். இந்தத் தாக்குதாலின் காரணமாகவே நிமலரூபன் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் கோமா நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த அனர்த்தங்களின் பின்னராவது கைதிகளின் விடுதலையைத் தூரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பதுதான் இன்று எழுகின்ற கேள்வி. மே 24 ஆம் திகதி ஒரு மாத கால அவகாசம் கேட்ட அரசாங்கம் விஷேட நீதிமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் இன்று வரையில் முன்னெடுக்கவிலலை. பதிலாக கைதிகளை இடமாற்றம் செய்து தேவையற்ற குழப்ப நிலை ஒன்றையே அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.
கைதிகளின் பிரச்சினை இந்தளவுக்கு மோசமான நிலையையடைந்த பின்னர் கூட வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.கள் இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதிலும், கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியைத் தனிப்பெரும் கட்சியாக வளர்ப்பதிலும் காட்டும் அக்கறையை கைதிகள் விவகாரத்தில் தலைவர்கள் காட்டுவதாகத் தெரியவில்லை.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் ஏற்பாட்டில் மக்கள் நடவடிக்கைக் குழுவே இந்தப் பிரச்சினையைக் கைகளில் எடுத்துள்ளது. அவர்களுடைய ஏற்பாட்டிலேயே இந்தப் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
கைதிகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைந்திருக்கவில்லை. பாராளுமன்றத்தில் அவர்கள் நிகழ்த்தும் வீராவேசப் பேச்சுக்கள் மட்டும் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கப்போவதில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் முன்னைய நிலையிலேயே அது இன்றும் உள்ளது. கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த 3 விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அரசாங்கம் மீண்டும் கூறியிருக்கின்றது. மே 24 ஆம் திகதி சொன்னதைத்தான் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மீண்டும் கூறியிருக்கின்றார்.
3வருடங்களுக்கு முன்னர் நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடதான் இந்த யோசனையை முதலில் முன்வைத்தவர். இன்று முதல் இந்த யோசளை அவ்வப்போது முன்வைக்கப்படுகின்ற போதிலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் எதுவம் அரசிடம் இல்லை.
இந்த நிலையில் வவுனியா சிறைச்சாலைச் சம்பவம் போல மேலும் பல சம்பவங்கள் இடம்பெறலாம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக