13 ஜூலை 2012

முள்ளிவாய்க்கால் புதைகுழிகளை வெளிப்படுத்திய அமெரிக்க செய்மதிப் படங்களை நிராகரிக்கிறார் கோத்தாபய!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் பற்றிய, அமெரிக்க செய்மதியினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை அமெரிக்க செய்மதி ஒன்று படம்பிடித்திருந்தது.
இந்தப் படங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதைக்கப்பட்ட தற்கு ஆதாரமாக, மூன்று புதைகுழிப் பிரதேசங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர்.
இவற்றில் ஒன்றில் 1436 புதைகுழிகளும், மற்றொரு இடத்தில் 960 புதைகுழிகளும் புதிதாக தோன்றியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் அந்தப் புதைகுழிகள் காணப்படவில்லை.
இதனால், இவை போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் புதைகுழிகள் என்று அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, இவை பொதுமக்களின் புதைகுழிகளே அல்ல என்றும் விடுதலைப் புலிகளின் புதைகுழிகள் என்றும் கூறியுள்ளார்.
“மனிதாபிமான நடவடிக்கையின் போது முல்லைத்தீவில், விரிவாக்கப்பட்ட இந்த மூன்று புதைகுழிப் பகுதிகளில் ஒன்றில் அதிகபட்சமாக 1346 புதைகுழிகள் காணப்படுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான இடுகாடு என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு இடத்தில் 960 புதைகுழிகள் காணப்படுகின்றன.
இவற்றையும் இணைத்து இறுதிக்கட்டப் போரில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கற்பனையில் செய்யப்பட்டு, மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன“ என்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
தியத்தலாவவில் கடந்தவாரம் சிறிலங்கா இராஜதந்திரிகள் மத்தியில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக