13 ஆகஸ்ட் 2010

அகதிகள் கப்பலினுள் கனேடிய கடற்படையினர் ஏறி, விசாரணை.



490 இலங்கை அகதிகளுடன் கனடாவை அடைந்துள்ள 'எம். வி. சன் சீ ' கப்பலுக்குள் அந்நாட்டுக் கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாக கனேடியன் குளோப் அண்ட் மெயில் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் சீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் சீ கப்பல் தெரியப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார்.கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் சென்றுள்ள இந்தக்கப்பல் இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடையும் எனவும், அக்கப்பல் குறித்து கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அக்கப்பலுக்கு அருகில் இருந்த மீன்பிடிக் கலத்தின் ஓட்டுநர் ஒருவரும் சன் சீ பற்றி கனேடியன் பிரஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். தனது மீன்பிடிக்கலத்துக்குக் கிடைத்த வானொலி அலைகள் மூலம், அகதிகள் கப்பலினுள் பிரவேசித்துள்ள கனேடிய கடற்படையினர் அங்குள்ள அகதிகளை கேள்விகளால் துளைத்தெடுப்பதை அறியமுடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.எத்தனை பேருக்கு உடல்நிலை சரியில்லை, எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பெண்கள், எத்தனை சிறுவர்கள் போன்ற பத்தாயிரம் கேள்விகளை அவர்கள் கேட்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். இக்கேள்விகளுக்கு, "490 பேர் ஏறினார்கள், பின்னர் அது 480 ஆகியது, பின்னர் அது 450. ஒருவருமே இறக்கவில்லை. ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை"போன்ற பதில்களை அகதிகள் அளித்துள்ளனர்.இது இவ்வாறிருக்க, இக்கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கப்பல்கள் கனடாவை நோக்கி வருவதை நிறுத்த கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒன்றன் பின்னொன்றாக பல கப்பல்கள் வரும் என்றும் அவர் கனடாவை எச்சரித்துள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக