31 ஆகஸ்ட் 2010

அமெரிக்காவில் மஹிந்தரை கைது செய்ய முடியுமா? உயர் சட்ட ஆலோசனையில் ஒபாவுக்கான தமிழர்கள்!



ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? என அந்நாட்டின் பிரதம நீதியரசர் ஜோன் ரொபேட்ஸிடம் அமெரிக்கத் தமிழரின் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுத்துமூலம் அபிப்பிராயம் கோரி உள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திபோது இடம்பெற்ற போர்க் குற்றங்களின் சூத்திரதாரி என்கிற வகையில் அவரை ஏன் கைது செய்ய முடியாது? என்று வினவி உள்ளது.
போர்க்குற்றம் புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட பலரை அமெரிக்கா முன்னைய நாட்களில் கைது செய்து உள்ளது. நாஸிகள் பலரையும் குற்றங்கள் இடம்பெற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் கூட அமெரிக்கா கைது செய்திருந்தது, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடயத்தில் முன்பு இடம்பெற்றிருக்கும் அக்கைதுகள் முன்னுதாரணங்கள் ஆகி விட முடியுமா? என்பதே இவ்வமைப்பின் சந்தேகம் ஆகும்.
ஏனெனில் மஹிந்தரின் விவகாரம் வித்தியாசமானது .மஹிந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றம் ஒன்றினால் முன்வைக்கப்பட்டிருப்பவை அல்ல. மாறாக சர்வதேச மக்கள் அமைப்புகளான- சர்வதேச நெருக்கடிகள் குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமைகள் அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டு வருபவை ஆகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் இராணுவத்தினரால் போர்க்குற்றங்கள் புரியப்பட்டமைக்கான ஆதாரங்கள் ஏராளம் உள்ளன என இவ்வமைப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் அகதிகளுக்கான பாதுகாப்பான பிரதேசங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றின் மீது வலிந்து குண்டுகள் வீசுதல், மனிதாபிமான உதவிகள் செய்யும் நிறுவனங்களின் மீதான வன்முறைத்தாக்குதல் போன்றவை அநேகமாக எல்லோராலும், எவ் வகையான வரைவிலக்கணங்களின் கீழும் போர்க்குற்றங்களாக கருதப்படுவன தானே? என்று பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கேட்டுள்ளது.
இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டோர் எதுவித விசாரணைகளுமில்லாமல் கொலைசெய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு என்றும் ஆனால் இவ்வாதாரங்கள் எந்த நீதிமன்றத்தினாலும் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை என்றும் இந்நிலையில் அமெரிக்க நீதிமன்று ஒன்று ஏன் விசாரிக்கக் கூடாது? என்றும் இவ்வமைப்பு கேள்வி தொடுத்துள்ளது.
பொஸ்னியாவில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்று அறிக்கைகள் தெரிவித்தபோது அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் தலையிட்டன என்று இவ்வமைப்பு பிரதம நீதியரசருக்கான கடிதத்தில் சுட்டிக் காட்டி உள்ளது.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து ஊடகங்களுக்கு முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-
"நாம் சட்டவல்லுனர்கள் அல்லர், பிரதம நீதியரசருக்கான எமது கடிதம் அவரின் கருத்தைக் கேட்கும் முகமாகவே எழுதப்பட்டது.எழுதப்பட்ட விடயம் மிகவும் சிக்கலான விடயம் ,எனவே உயர்-சட்ட ஆலோசனை தேவை.
பிரதம நீதியரசர் ரொபேட்ஸ் அவரது கருத்தை எம்முடன் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கிறோம். அவரது கருத்து பொதுக்கருத்தாடல் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என நாம் நம்புகின்றோம். சட்டத்தரணிகளும்,நீதிபதிகளும் இது பற்றி பேசும் நிலை வர வேண்டும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக