16 ஆகஸ்ட் 2010

இளம் பெண்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு.




கிளிநொச்சிப் பெண்களுக்கு கூடிய சம்பளங்களுடன் சிறந்த வேலைவாய்ப்பைத் தருவதாகக் கூறி கண்டியிலுள்ள தனியார் நிறுவனமொன்று அப்பெண்களைக் கடத்த எடுத்த முயற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின்மீது சந்தேகம் கொண்ட வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரவணபவன் மற்றும் சிறிதரன் ஆகியோர், இப்பெண்களைக் கூட்டிச்செல்வதற்காக கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு விஜயம் செய்து மேற்படி கடத்தலைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.தென்மாகாணத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக கண்டி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்த இளம்பெண்களைக் குறித்த நிறுவனம் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளதாகச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சட்ட ரீதியான அனுமதி எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். இதற்கிடையில், இந்நிறுவனமானது கிளிநொச்சியில் இரவுபகலாக கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ தெரியாமல் இளம்பெண்களைக் கடத்தும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சிறிதரன் கூறியுள்ளார். எனவே இலங்கை அரச படைகளும் சேர்ந்தே இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தெளிவாகியுள்ளது. போரினால் தமது கணவன்மாரை அல்லது குடும்பத் தலைவர்களை இழந்துள்ள இளம் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் தருவதாக அவர்கள் வலை விரித்துள்ளார்கள்.இதேவேளை, தடுப்பு முகாமிலுள்ள முன்னாள் பெண் புலிகளை அரசாங்கமானது சிறைகளிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் சம்பளம் இன்றியே வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக