26 டிசம்பர் 2011

மன்மோகனுக்கு கருப்புக்கொடி!விஜயகாந்த் கைதாகி விடுதலை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பிலிருந்து ஊர்வலகமாக புறப்பட்ட தேமுதிகவினர் சின்னமலை வழியாக பிரதமர் தங்கியிருந்த ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை ஏற்க மறுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினர் திருமண மண்டபவங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 12.45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், கூடங்குளம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல், தனியார் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் செல்வது தவறு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க பிரதமர் வந்தாரா? அரசாங்கம் விழாவுக்கு வந்த மாதிரி வந்துவிட்டு, ப.சிதம்பரம் சொல்கிற 2 விழாவுக்கு போய் சேருகிறார் பிரதமர். மக்கள் செத்தாலும் பரவாயில்லை. பிரதமர் விழாவுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். 4 அடுக்கு பாதுகாப்பு என்று சொன்னார்கள். திருச்சியில் இருந்து காரில் போகிறார் என்றார்கள். எங்கே கருப்புக்கொடி காட்டுவார்களோ என்று உடனே விமானத்தில் போகிறார். இதுதான் மக்களுக்கு செய்கிற நல்ல காரியமா?
திமுக அதிமுக ஒன்றுபட்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு போராட தயாராக இருந்தால், தேமுதிகவும் போராட்டத்தில் இணையும். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தேமுதிக தயாராக உள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்திய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும், தே.மு.தி.கவினர் மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஆயிரகணக்கானவர்கள் கைது செய்யபட்டனர். 10 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கைதானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக