25 டிசம்பர் 2011

காணி,காவல்துறை அதிகாரம் இல்லாது அரசு எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்போகிறது?

பொலிஸ், காணி அதிகாரங்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு வழங்கமுடியாது எனக் கூறிக்கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டிருப்பதானது இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு முனையும் நடவடிக்கையென தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசு எவ்வாறு அரசியல் தீர்வை வழங்கப்போகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளதன் அடிப்படையே வடக்கு கிழக்குக்கு காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதாகும். ஆனால், அரசாங்கத்தில் உள்ள ஹெகலிய போன்ற அமைச்சர்கள் காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது என்கின்றனர். தற்போது அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கொண்டுவருவதற்கே இந்தப் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்துகின்றது.
நிலாவைக்காட்டி பிள்ளைக்கு சோறூட்டுவது போல தமிழ்த்தேசியக் கூட்மைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைத்து சர்வதேச நெருக்கடியில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இன்று தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டங்களை வழங்கி அவர்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்த உதவுமாறு சர்தேச சமூகம் இன்று இலங்கை அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.
இந்த நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசாங்கம் அவசரஅவசரமாக அமைக்க முனைந்துள்ளதுடன் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை அச்சுறுத்தி உள்வாங்க முனைகின்றது. இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அடிபணியாது. அந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவானது ஒரு’பீடா”க்கடை போன்றது அதன் மூலம் எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
இந்த நிலையில் காணி,பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். அத்துடன் பேச்சு வார்த்தைகள் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் கருத்துக்கள் வழங்குவதை நிறுத்தி ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக