22 டிசம்பர் 2011

ஆறுமுகன்,கக்கீம் ஆகியோர் போல் கூட்டமைப்பும் தம்மை ஆதரிக்க வேண்டும் என்கிறார் பசில்.

விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களை விட மோசமாக நடந்து கொள்கிறது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பசில் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்தபோது, விடுதலைப் புலிகள் போன்றே கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில் பசில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“விடுதலைப் புலிகள் சிலவேளைகளில் விரும்பியோ, விரும்பாமலோ அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடனோ போர் நடந்து கொண்டிருந்த போது கூட அரசாங்கத் தரப்புடன் வெளிநாடுகளில் பேச்சுக்களை நடத்த முன்வந்தனர்.
அவ்வப்போது போர்நிறுத்த உடன்பாடுகளைச் செய்து கொண்டு, திடீரெனப் போரை பிரகடனம் செய்யும் தந்திரங்களையும் கையாண்டது.
முன்னர், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே என்ற ஆணவத்துடன் விடுதலைப் புலிகள் செயற்பட்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்ற போதிலும், தம்முடன் மட்டுமே பேச்சுக்களை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற தவறான மனப்போக்கில் செயற்படுகிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கு கொள்வது அவசியம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மட்டும் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியாது.
தெரிவுக்குழுவில் உள்ள சகல கட்சிகளுடனும் பேசி அவற்றின் இணக்கப்பாட்டுடன் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே, சமாதானத்தை நிலைத்திருக்கச் செய்ய முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அத்துடன் அந்த விவகாரம் முடிந்து விடும்.
ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் சிறப்பு தெரிவுக்குழு ஒன்றின் மூலம் பரிசீலனைக்கு எடுத்து, அதில் கூறப்பட்டுள்ள யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் சட்ட நுணுக்கங்களை தெளிவாக ஆராய்ந்து, ஒவ்வொன்றுக்கும் அரசாங்கம் நியாயமான தீர்வை ஏற்படுத்துவதே புத்திசாலித்தனமான செயல் என்று நான் நினைக்கிறேன்.
ரவூப் ஹக்கீம், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தமது மக்களின் நலனுக்காக சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவது போன்று, அதே வழியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்.
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் வடக்கில் சட்டபூர்வமான அரசியல் செய்வதை அரசாங்கம் வரவேற்கிறது.
அதுபோன்று தெற்கிலுள்ள ஏனைய கட்சிகளும் வடக்கில் அரசியலில் ஈடுபடுவது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு உதவியாக அமையும்.
அதேவேளை, ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற குழுவினர் வடக்கில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு சதி வேலைகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக