29 டிசம்பர் 2011

பூநகரிப்பகுதியில் படைகளுக்கிடையில் மோதல் ஒரு அதிகாரி பலி!

கிளிநொச்சி மாவட்டத்தில் சங்குபிட்டி, பூநகரி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொரு அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில்,18வது கெமுனு படை முகாமைச் சேர்ந்த படை சிப்பாய் ஒருவர் முகாமில் இருந்து தப்பியோடியதாகவும் அவரை சக இராணுவ வீரர்கள் துரத்திச் சென்று பிடித்து வந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டின்போது இராணுவ உப லெப்டினன் அதிகாரி ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததோடு, இராணுவ லெப்டினன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிப்பாய் கைது செய்யப்பட்டு தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக