26 டிசம்பர் 2011

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளதாக - அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளில் ஒன்றான- “சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலக குழு“ (Minority Rights Group International) கண்டித்துள்ளது.
சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளதை வரவேற்றுள்ள இந்த அமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த முக்கியமான சில விவகாரங்களில் அளித்துள்ள பரிந்துரைகளையும் வரவேற்றுள்ளது.
மொழி, காணி உரிமைகள், மீள்குடியமர்வு, கட்டாயமாக காணாமற்போனவர்கள், பெண்களின் பாதுகாப்பு, முஸ்லிம்களின் இடம்பெயர்வு போன்ற விடயங்களில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இந்த அமைப்பு வரவேற்றுள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை, ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவது பற்றி ஆணைக்குழு எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
சிறிலங்கா அரசு மற்றும் இராணுவத் தரப்பின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை பக்கச்சார்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து, இந்த அறிக்கையில் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை.
போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் சிறிலங்காவில் ஆட்கள் கட்டாயமாகக் காணாமற்போகும் சம்பவங்களும், சித்திரவதைகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் தொடர்கின்றன.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நீதியையும், பெறுப்புக் கூறுவதையும் உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு தவறியுள்ளது.
இந்தச் சூழலில், அனைத்துலகத்தின் நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து, அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு, ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்“ என்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலக குழு அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக