04 டிசம்பர் 2012

மாத்தளை மருத்துவமனையில் பாரிய மனிதப் புதைகுழி!

இலங்கையின் மத்திய பகுதியிலுள்ள மாத்தளை மருத்துவமனைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியிலிருந்து கடந்த மூன்று தினங்களில் மட்டும் 16 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ள மனித எச்சக்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடரும் அதேவேளையில் இங்கு மேலும் மனித எச்சங்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தகவலின்படி மேலும் பெருமளவு மனித எச்சங்கள் இப்பகுதியில் மீட்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
மாத்தளை மருத்துவமனையின் உயிரியல் வாயுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போது நவம்பர் 30 திகதி முதலில் ஆறு பேருடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. அத்திபாரத்துக்காக நிலத்தைத் தோண்டிய போதே இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஐந்து பேருடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டதையடுத்து இந்தப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்றிருக்கலாம் எனக் கருதப்பட்டது.
இதனையடுத்து புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்போது இதுவரையில் 27 பேருடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மனித உச்சங்கள் இபடபகுதியில் இருக்கலாம் எனக் கருதப்படுவதால் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுகக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகின்றது.
இதேவேளையில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் குழு ஒன்று புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு இன்று அவசரமாக அனுப்பிவைக்கப்படவிருக்கின்றது. பெருமளவு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான விசாரணையை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மனித எச்சங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இது 20 வருடத்துக்கு முற்பட்ட புதைகுழியாக இருக்கலாம் என மாத்தளை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்த போதிலும், கொல்லப்பட்டவர்கள் யார் என்பது தொடர்பாகவோ அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது பற்றியோ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
1971 ஆம் ஆண்டிலும் பின்னர், 1988- 1989 காலப் பகுதியிலும் ஜே.வி.பி. மேற்கொண்ட கிளர்ச்சியின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் புதைகுழியாக இது இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக