30 டிசம்பர் 2012

அரசாங்கத்தை எமது வழிக்கு கொண்டுவர வேண்டும் - ஹக்கீம்

இந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்தப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற மாட்டாது. ஆனால் எமது எட்டு எம்.பி.க்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் இந்த அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரலாம் என்று அக்கட்சியின் தலைவரான நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இப்போது கிழக்கு முதலமைச்சர் எமது கட்சியைப் புறக்கணித்து நடக்கிறார். ஆனால் இன்னும் இரு வருடங்களில் அந்த முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24வது பேராளர் மாநாடு, தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (29) நடைபெற்ற போது அதன் இரண்டாவது அமர்வின் இறுதியில் பிரதான உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீமின் உரையின் பெரும் பகுதி பேராளர்கள் சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது.
அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது;
"கட்சி எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு மத்தியில் புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே ஓர் அக்கினிப் பரீட்சை நடைபெற போகின்றது, அந்த அக்கினிப் பரீட்சைக்கு எப்படி முகம் கொடுப்பது என்பது குறித்து உயர்பீடம் தீர்மானிக்கும்.
இன்று பல பிரேரணைகளை நாம் நிறைவேற்றி இருக்கிறோம், அந்த பிரேரணைக்கமைய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகிய நாம் எட்டுப் பேரும் அந்த அக்கினிப் பரீட்சையை எதிர் கொள்ள இருக்கிறோம். என்ன சட்டமூலமாக இருந்தாலும் கட்சியின் கொள்கை,கோட்பாட்டுக்கமைய அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருகிறோம். ஏற்கனவே மாகாண சபையில் அந்த அனுபவம் ஏற்பட்டது.
இதனை கட்சியின் போராளிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே புதிய அதியுயர் பீடத்துக்கு இருக்கின்ற முதலாவது பணி அக்கினிப் பரீட்சையை எதிர் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதாகும். அந்த தீர்மானத்தை பொறுத்தவரை பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக எமது உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உறுதியானது.
முஸ்லிம் காங்கிரசை தாம் விரும்பிய திக்கில் இழுத்துக் கொண்டு போகலாம் என சில பத்திரிகைகள் நினைக்கின்றன. அவர்களது தேவைகளுக்கமைவாக எமது கட்சி செல்ல முடியாது. நாம் பிரயோக அரசியலைச் செய்கிறோம். ஆனால் கட்சியின் அடிப்படையை தாரைவார்க்க முடியாத ஒரு முக்கியமான சவாலை நாம் முதலில் எதிர் நோக்கியிருக்கிறோம், எனவேதான் இந்த பேராளர் மாநாடும், இதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
அரசாங்கத்தோடு நாம் சில முக்கிய விடயங்களை கதைத்திருக்கிறோம், அரச மேல் மட்ட அமைச்சர்கள் சில உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள். அவ்வாறான உத்தரவாதத்தை தந்த அமைச்சர் ஒருவரே அடுத்த சில நாட்களில் எங்கள் வாக்குகளை பாராளுமன்றத்தில் எதிர்பார்த்து இருக்கிறார், நாங்கள் ஒன்றாக இருந்து ஒற்றுமையாக செயல்படுவது எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்க்கு முக்கியமானது.
நாங்கள் தனித்துவமான அரசியல் செய்கின்ற இயக்கத்தினர் என்ற காரணத்தினால் பழிவாங்கப்படுகிறோம். நாங்கள் இரண்டறக் கலந்து சங்கமமாகாத கட்சியின்ர் என்ற காரணத்தினால் ஓரக்கண்ணால் பார்க்கப்படுகிறோம்.
எங்களது போராளிகள் நாளும் பொழுதும் இதற்க்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள், பட்டதாரிகள் நியமனம் போன்றவற்றில் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நம்பிக்கைக்குரியவர் என்ற கருத்து எங்கள் மத்தியில் இருந்தாலும் கூட, இங்கு சிலர் கூறியவற்றை கேட்கும் பொழுது அவரைப் பற்றி மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது, எங்களுக்கு குறிப்பாக எங்களது கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு அவர் நண்பராக இருக்கிறார் என்பது வேறு விசயம். ஆனால் என்னவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அமைச்சராக இருக்க முடியும். இதனை நான் மிகவும் உறுதியாகவும் அறுதியாகவும் கூறுகின்றேன்.
நாங்கள் அரசாங்கத்தை விட்டு விட்டு போக மாட்டோம், அதற்கான ஆணையை மக்கள் எங்களுக்குத் தரவில்லை ஆனால் எங்களது சுய கெளரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.
அடுத்த மாதம் பிரதம நீதியரசருக்கு நிறைவேற்றப்படுகின்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மற்றும் சட்ட திட்டங்களுக்கு கட்சி ஆதரிப்பதா இல்லையா என்று அடுத்த உயர் பீட கூட்டத்தின் போது 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு செயற்படுவது எனத் தீர்மானம் எடுக்கப்படும்.
கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு இன்னும் 2 வருடங்கள் பொறுத்திருங்கள். அந்த முதலமைச்சரால் குச்சவெலி பிரதேசத்தின் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களை ஒன்றும் செய்ய முடியாது. முதலமைச்சர் ஆசனத்தில் அவரை அமர்த்தும்போது அவர் முஸ்லீம் காங்கரிஸ் காரர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமர்த்தவில்லை. அவர் எம்மோடு சேர்ந்து செயலாற்றுவார் என்றுதான் என்ணியிருந்தோம். ஆனால் அவர் எமக்கு மாறு செய்கிறார். ஆகவே இன்னும் இரு வருடங்கள் நாம் பொறுமையுடன் இருப்போம்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் எம்.பி. செயலாளர்நாயகம் எம்.ரி.ஹசன் அலி எம்.பி. பொருளாளர் எம்.எஸ்.எம்.அஸ்லம் எம்.பி. மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களும், உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்களும், பேராளர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக