06 டிசம்பர் 2012

முடியாத ஏக்கங்கள்",எனும் தலைப்பில் பெண்போராளி எழுதிய நூல் வெளியீட்டு விழா!

முன்னாள் போராளி எழுதிய முடியாத ஏக்கங்கள் நூல் வெளியீடுமன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச்செல்வி (வேலு சந்திரகலா)எழுதிய முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில்  இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதை நூலில் முழுக்க ழுழுக்க போரில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறானாளிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா கடந்த முதலாம் திகதி அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி செல்வி வேலுசந்திரகலாவின் இந்த நூல்வெளியீட்டு விழா கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் வெளிப்பாடுகளுடன்அமைந்திருந்தது.
போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி தனது சிறுகதைகளிலும் மாற்றுத்திறனாளிகள் மீதான பார்வைமாற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு மன்னார்,வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த பல மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டடிருந்தனர்.
இந்த நிகழ்வில் ஒரு கையை இழந்த சிறுமி அன்பரசியின் நடன நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நூலுக்கான மதிப்பீட்டுரையை  வழங்கிய அம்பிகைபாலனும் இரண்டு கால்களும் வழங்காத ஒரு மாற்றுத்திறனாளியாவார்.
இந்த நிகழ்வில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டார். மாந்தைமேற்கு உதவி அரச அதிபர் பிரிவு சமூகசேவை உத்தியோகத்தர் த.தனசீலன் நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவி அரசஅதிபர் மா.சிறிஸ்கந்தகுமார் ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொண்டனர். அடம்பன் பங்குத்தந்தை அருட்திரு லக்கோன்ஸ் பிகிராடோ, மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் அருட்திரு இ.செபமாலை,அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் மை.கிறிஸ்ரியான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நூல் நயப்புரையை மன்னார் வட்டக்கண்டல் அ.த.க.பாடசாலையின் தமிழ் ஆசிரியை பரமேஸ்வரி சிலுவேஸ்திரன் வழங்கினார். ஏற்புரையாற்றறிய சந்திரகலா மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு வாழவேண்டும் எனவும் இவர்கள் மீது சமூகம் அக்கறையும் கரிசனையும் கொள்ளவேண்டும் எனவும் எடுத்துரைத்தார். மன்னார் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான தேனீ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக