12 டிசம்பர் 2012

பேய் பிடித்ததாக கூறி தமிழ் பெண்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சிங்களப்படைகள்!

தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி படைத்தரப்பு சுமார் 21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையினில் ஒப்படைத்துள்ளது. அண்மையில் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் கிளிநொச்சியின் பாரதிபுரம் முகாமில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
பேய் பிடித்த இவர்கள் இரவு வேளைகளில் எழுந்து நின்று சன்னதமாடுவதாக கூறியே தம்மிடம் அனுமதிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கருத்து வெளியிட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 13 பேரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த போதும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் சுயாதீன தகவல்கள் அவ்வெண்ணிக்கை 21 என தரிவிக்கின்றன.
தற்போது வைத்தியசாலையின் தனியான பிரிவில் படையினரது கண்காணிப்பின் கீழ் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதுடன் ஊடகவியலாளர்களோ தமிழ் அரசியல் தரப்பாரோ உட்சென்று பார்வையிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பெற்றோர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆவர்களது தகவல்களின் பிரகாரம் குறித்த யுவதிகள் வெறித்துப்பார்த்த வண்ணம் மூச்சு பேச்சின்றி இருப்பதாக தெரிவித்தனர்.
அவர்கள் பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டமையால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.குறித்த படை முகாமில் இரவு வேளைகளில் ஆவிகளை கண்டதாக ஒரு சிலர் சொன்ன போதும் தவறான நோக்கத்துடன் வந்த படையினராக இருக்கலாமென மற்றொரு அனுபவ தரப்பு கூறுகின்றது.
பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட படையில் தமிழ் யுவதிகளை இணைக்கும் நடவடிக்கை பின்னர் தோல்வியை நோக்கியே பயணித்திருந்தது. முன்னதாக ஒரு பகுதி யுவதிகள் தப்பி ஒடி வீடுகளை வந்து சேர்ந்திருந்தனர். மற்றொரு தொகுதியினர் வீடு திரும்ப முற்பட்ட போதும் படைத்தரப்பு அவர்களது பெற்றோரை பார்க்க கூட கடந்த சில நாட்களாக அனுமதித்திருக்கவில்லை.
இதனிடையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதிகளை பார்வையிட சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி அவரை உள்ளே அனுமதிக்க கூடாதென வன்னி படைத்தலைமை வைத்தியசாலை பணிப்பாளரை பணித்திருந்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக