20 மே 2011

ஐ.நாவே மீண்டும் தவறை செய்யாதே"என அமெரிக்காவில் கூடிய மக்கள் முழக்கம்.

சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் உச்சக்கட்டமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நிகழ்வு நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு நேற்று (19) நடைபெற்றுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை ஐக்கிய நாடுகள் சபை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
“ஐ.நாவே மீண்டும் தவறைச் செய்யாதே” “ பான் கீ மூன் – உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்” போன்ற கோசங்களும் அங்கு எழுப்பப்பட்டன.
சிறீலங்காவில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும், அதனை தடுப்பதற்கு தவறிவிட்டது என வெள்ளைமாளிகையின் முன் போராட்டத்தை நடத்திவரும் கலாநிதி கே தயாபரன் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
தற்போது ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தற்போதைய ஒபாமா அரசு சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் நல்ல உதாரணம் என அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் அரசியல்த்துறை பேராசிரியர் கிளன் மொறிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவிலும் அவர் அங்கம் வகித்திருந்தார்.
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது சிறிலங்கா அரசின் இயங்குநிலையை குறைத்துள்ளதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். நாம் எந்த சூழ்நிலையிலும் எமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக