25 மே 2011

றோவின் சதிதான் கே.பி ஊதிய பீப்பி!

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.
இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு, தேநீர் விருந்துக்கு டில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா,2009 போரில் இலங்கை இராணுவத்தினரின் கொடூரச்செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்குத் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.
குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.
அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.அதன் பின்னரே இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.
இந்நிலையில் அவரது இந்த மாற்றம், வெறும் வாக்குகளை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.
அதாவது ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சினை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்றும் கூறியதைப் பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில், 'ஐயோ... இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே...!' என்ற ஐயம் ஏற்பட்டது. இந்நிலையில், போர்க் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையையும், ஜனாதிபதி ராஜபக்ஷவையும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, ஆதரவாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கிப் போட திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.
இதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'றோ' மூலம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன.இதன் ஓர் அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைக்காட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.இந்திய தொலைக்காட்சிக்காக அந்தப் பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்தப் பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி. கூறும் பதில்களும், கே.பியை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப 'றோ' முயற்சிப்பது தௌ;ளத் தெளிவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில், ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே 'இசட்' ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது என்றும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொன்றிருப்பார்கள் என்றும் கே.பி. அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக