31 மே 2011

ஐ.நாவின் சட்ட திட்டங்களை மீறிப்பேசுகிறார் நவநீதம்பிள்ளை"ஸ்ரீலங்கா எச்சரிக்கை.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஐ.நாவின் சட்டதிட்டங்களை மீறும் வகையில் நடந்து கொள்வதாக சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஆரம்ப உரையாற்றிய போது நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை நியாயப்படுத்தும் முயற்சிகளில் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி சேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
“அதிகாரபூர்வமற்ற நிபுணர் குழு அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு நவநீதம்பிள்ளை கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
உறுதிப்படுத்தப்படாத தரவுகளின் அடிப்படையில் நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்களை வெளியிடுவது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் தொழில்சார் தன்மையை பாதிக்கும்.
உள்நாட்டு விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில், அந்த விசாரணைகளில் திருப்தியில்லை என்று நவநீதம்பிள்ளை முன்கூட்டியே கருத்து வெளியிட்டுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் விமர்சனப் பாங்கான இந்த நடவடிக்கை சிறிலங்காவுடனான ஐ.நாவின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக் கூடும்.“ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக