04 மே 2011

வன்னி மக்களிடம் ரகசிய விசாரணை நடத்தியது அமெரிக்கக் குழு.

இராணுவத்தினரும் அவர்களது புலனாய்வாளர்களும் பார்த்துக் கொண்டிருக்க யுத்தகாலத்தில் பொதுமக்கள் அனுபவித்த இன்னல்கள் தொடர்பாக தென்னாசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வெளிவிகார அமைச்சர் தலைமையிலான குழு இரகசிய இடத்தில் வைத்து பொதுமக்களோடு பேசியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த மேற்படிக்குழு அங்கு வேலை வாய்ப்புப் பணியகத்திற்குச் சென்று இளைஞர்களிடம் கலந்துரையாடியது.
பின்னர் நடைபெற்ற காலை 11மணியளவில் விவசாயிகளுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமெரிக்காவின்; நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட சில திட்ங்களை பார்வையிட்டது.
நிகழ்வின் முடிவில் பிரத்தியேகமான இடத்தில் பொதுமக்கள் சிலரை சந்தித்து யுத்தகாலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கேட்டறிந்தது. இதன்போது அரச அதிகாரிகள் உட்பட எவரும் அனுமதிக்கப்படவில்லை மேலும் இந்த நிகழ்வில் மூக்கை நுழைக்க இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர் முயற்சித்தபோதும் அது பலிக்கவில்லை.
அமெரிக்க அதிகாரிகள் பொதுமக்களிடம் யுத்தகாலத்தில் மக்கள் எப்படி பார்க்கப்பட்டார்கள்? இராணுவத்தினராலோ புலிகளாலோ மக்கள் யுத்தத்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டர்களா? புலிகள் மக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்களா? இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றபோது எப்படி நடத்தப்பட்டீர்கள்?
போன்ற கேள்விகளும் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் தற்போது மக்கள் எவ்வாறான நிலையிலுள்ளனர்? சுதந்திரமாக நடமாடும் நிலையுள்ளதா? போன்றனவும் கேட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு விளக்கமளித்த பொதுமக்கள் நடந்த சம்பவங்களை அப்படியே தெரிவித்துள்ளனர்.
மேலும் கண்முன்னால் தங்கள் பிள்ளைகள் சொந்தங்கள் இறந்து போனமை கணவன்மார் பிள்ளைகளை கண்முன்னால் கையளித்தபோதும் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாமை தற்போது முறையான வீட்டுத்திட்ட வசதிகள் கிடைக்கப்பெறாமை வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் தடுப்பிலுள்ள பிள்ளைகள் தொடர்பாகவும்; கூறினார்.
சந்திப்பின் பின்னர் இராணுவப் புலனாய்வாளர்கள்; விளக்கமளித்த பொதுமக்களிடம் என்ன கேட்டார்கள் பேசினார்கள் என கேட்டறிந்தனர். இந்த நிகழ்விற்கு காலையிலிருந்தே பெருமெடுப்பில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் கிளிநொச்சி மாவட்டக் கட்டளைத்தளபதியும் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் அவர்கள் எவரையும் அமெரிக்காவின் அதிகாரிகள் குழு கண்டுகொள்ளவேயில்லை. அதனோடு யார் நிகழ்வுகளை நடத்தினாலும் அழையா விருந்தாளிகளாக வந்து மேடையில் அமரும் இராணுவத்தினர் வீதிகளில் மட்டும் நின்றனராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக