10 மே 2011

தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பஷில் ராஜபக்ஷ.

வெளிநாடுகள் இலங்கை மீது சுமத்தும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்குத் வெறும் டொலர்களுக்காகவோ சுயலாபங்களுக்காகவோ துணை போகாதீர்கள். அறிக்கைகள் விட்டோ, வேறு வழிகளிலோ வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும் என்று தமிழர்களை எச்சரித்துள்ளார் பஸில் ராஜபக்ஷ.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கில் மேலும் சில பகுதிகளில் நேற்று மீள்குடியமர்வு இடம் பெற்றது. 9 கிராமசேவகர் பிரிவுகளில் 3,000 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. அமைச்சர்கள் பஸில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் யாழ். மாநகர முதல்வர் ப.யோகேஸ்வரி ஆகியோர் இந்த மீள் குடியமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். மக்களின் மீள்குடியமர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கொண்டிருந்தார்.
மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை அடுத்து மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 20 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணுக்கும் வீடுகளுக்கும் சென்ற மக்கள், உணர்ச்சிப் பெருக்கோடு காணப்பட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பஸில், நாட்டின் எப்பகுதியிலும் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று இல்லை; சமாதான வலயங்களே இல்லை என்கிற ஜனாதிபதியின் செய்தியுடனேயே தான் இங்கு வந்திருக்கிறார் என்று தெரிவித்தார். எதிரிகள் எவரும் இல்லாத காரணத்தால் ஒரே நாட்டில் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்வதால் பாதுகாப்பு வலயங்களுக்குத் தேவை ஏதும் இல்லை என்றார் அவர்.
"மீண்டும் எதிரிகளுக்கு இடமளிக்கும் வகையில் வெளிநாட்டுச் சக்திககளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது. வெளிநாட்டின் உதவியுடன் வந்த ஒப்பந்தத்தால் இந்த நாட்டில் சமாதானம் வரவில்லை. 30 வருடங்களின் பின்னர் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுத்தான் இந்த மண்ணை இன்று உங்களிடம் கையளிக்கிறார்கள். இங்கு மீளக்குடியமரும் மக்கள் வெளிநாடுகள் திணிக்கும் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு துணைபோகக் கூடாது. அது அழிவுக்கே வழி ஏற்படுத்தும் என்று அமைச்சர் பஸில் கூறினார்.
இந்தப் பகுதியில் மீள்குடியமர்வை நீண்டகாலத்துக்கு முன்பே செய்வதற்குத் திட்டமிட்ட போதும் சிலரின் சதி வேலை காரணமாக அது சாத்தியப்படாமல் போனதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் அந்தச் சிலர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக