16 மே 2011

போர்க் குற்றம் தொடர்பில் சுவிஷும் கனடாவும் கலந்துரையாட உள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து சுவிட்சர்லாந்தும், கனடாவும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இது நட்புரீதியற்றது என இலங்கை அரசு தனது எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி மற்றும் சுவிஸ் தூதுவர் தோமஸ் லிற்சர் ஆகியோரை அழைத்து வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒட்டாவா மற்றும் பேர்ன் பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்களும் இந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டம் வழமையாக நடைபெறும் கூட்டம் எனவும், அதில் பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதாகவும் கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிற்செருக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிற்சர்லாந்தும் தனது ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக