11 மே 2011

விளக்கமளிப்போம் ஆனால் விளக்கமளிக்க மாட்டோம் சிங்களத்தின் முரண்பாடுகள்.



இலங்கையின் வடபகுதியில் இடம் பெற்ற யுத்தம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கீ மூனுக்கு விளக்கமளிக்கப்படும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எனினும் இலங்கையின் யுத்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பிலான தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று ஊடக பிரதானிகளுடன் இடம் பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கையில் இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதையே அரசாங்கம் இலக்காக கொண்டிருந்தது. இறுதி யுத்தம் நடைபெற்ற போது,பாதிக் கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சின்னத்துடனான கப்பல் ஒன்று கோரப்பட்டது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை இதனை வழங்கவில்லை.எனினும் அரசாங்கம் அந்த பணிகளை சிறப்பாக மேற் கொண்டது.
எமது அரசாங்கம் மாறினாலும், சர்வதேசத்தின் அழுத்தங்கள் தொடர்ந்தும் காணப்படும் என்றார்.மேலும் தம்மால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,இந்தக் குழு முழுமையான அறிக்கை ஒன்றை வழங்கும் பொருட்டு, காலத்தை நீடிக்குமாறு கோரியுள்ளது.
எனினும் தற்போது இந்த ஆணைக்குழு இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 7 அமைச்சின் செயலாளர்கள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய விசேட குழுவொன்று இலங்கைக்கு வருவதாக தெரிவித்துள்ள போதும் அந்தக்குழு தற்போதைக்கு இலங்கை வராது என்றார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்புக்கள் குறித்து கருத்துரைத்த ஜனாதிபதி, இரண்டு தரப்பின் இணக்கப்பாடு தொடர்பிலும் பொது செனட்சபை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகள் குறித்து ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் பேசவுள்ளோம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு கட்சியில்லை.
விடுதலைப்புலிகள் கோரியதை ஒரு போதும் வழங்க முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீரிஸின் முரண்பட்ட கருத்து:
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அந்த அறிக்கைக்கு அரசு பதில் அளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
யதார்த்த நிலை குறித்து ஐ.நா.பொதுச் செயலாளருக்கு அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.நேற்றுக் காலை அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் உடனிருந்தனர்.
அப்போது ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் பீரிஸ், நிபுணர் குழுவின் அறிக்கைக்குப் பதில் அளிக்கப் போவதில்லை என்ற அரசின் இறுதி முடிவு பற்றித் தெளிவுபடுத்தினார். ”தஸ்ருமன் அறிக்கைக்குப் பதில் அளிப்பதை விடுத்து, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செய்யும் நற்பணிகள் குறித்தும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசு செய்துவரும் மனிதாபிமானப் பணிகள் குறித்தும் ஆதாரபூர்வமான அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு அதன் செயலாளர் நாயகம் ஊடாக அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து வருகிறோம்” என்றார் அமைச்சர்.
தருஸ்மன் அறிக்கை ஒரு தலைப்பட்சமான அறிக்கை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.இந்த அறிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பீரிஸ் பதில் அளிக்கையில், “நாம் இந்தியாவுடன் பேசி வருகிறோம். இந்தியா எங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக