14 ஜூன் 2010

வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுத் திட்டம் அவசியம்.-விக்கிரமபாகு கருணாரட்ன.



இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் சுய நிர்ணய உரிமையுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வருமாயின் அதற்கு ஆதரவளிக்க தயார். என்று இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
ஆனால் தமிழர்களின் பூர்வீகத்தை உள்நாட்டு அரசாங்கம் இனவாத அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
இலங்கை தேசியப் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சுயநலமாக செயற்படக் கூடாது.
அதே போன்று இணைக்கப்படாத வடக்கு கிழக்கிற்கு வழங்கப்படும் தீர்வுகள் பயனற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீகமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் இப் பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய அதிகாரங்களை சட்டபூர்வமாக வழங்கப்படல் வேண்டும்.
வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்காது அரசாங்கம் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாயின் அதற்கு தமிழ் அரசியல் தலைமைத்துவமோ சர்வதேசமோ இடமளிக்க கூடாது.
13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமை தற்போதும் நடைறையில் உள்ளது. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டமையினாலேயே அம்முறை பயனற்றுப் போயுள்ளது.
இலங்கையின் தேசியப் பிரச்சினையில் உள்நாட்டு அரசாங்கம் நம்பகத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக