21 ஜூன் 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்றிருக்கும் கே.பி.


சிறீலஙகா அரசுக்கு ஆதரவளித்து அமைதியைக் கட்டியெழுப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருப்பதாகவும், இதனை தான் வரவேற்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கே.பி அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில வார ஏடான சண்டே ஒப்சேவருக்கு செவ்வி வழங்கியிருந்த பத்மநாதன், தானும், கனடா, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்ற பெயரில் இயங்கி வரும் 9 பேருடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிக் கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசுடன் இணைந்து செயலாற்ற எடுத்திருக்கும் முடிவை தான் வரவேற்பதாகக் கூறியிருக்கின்றார்.
தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயலாற்றுவது பற்றியோ, எந்த அடிப்படையில் என்ன விதமாகப் பணியாற்றுகின்றோம் என்பது பற்றியோ, தம்மை தெரிவு செய்த மக்களிற்கு இதுவரை வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை.
பத்மநாதன் கூறியது போன்று அரசுடன் இணைந்து பணியாற்றினால் அது பற்றி மக்களிற்குத் தெளிவுபடுத்தும் கடமையும், கட்டாயமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது. இல்லையெனில் பத்மநாதனின் கருத்தை மறுத்து அறிக்கை வெளியிட வேண்டிய கடப்பாடும் உண்டு.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற யப்பானின் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் யசூசி அகாசி, பசில் ராஜபக்ச, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்து கொண்டிருந்த போதிலும், தமிழ் ஊடகங்கள் இதனை இருட்டடிப்புச் செய்திருந்ததை பதிவு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சமகால நடவடிக்கை, எதிர்கால செயற்பாடுகள் பற்றி மக்களிற்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அச்சம் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் 70 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக