22 ஜூலை 2011

இலங்கைக்கு உதவிகள் வழங்கக்கூடாது.அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்.

இலங்கைக்கான உதவிகள் நிறுத்தப்பட வேண்டுமென அமெரிக் காங்கிரஸ் சபை கோரிக்கை விடுத்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் உதவிகளை வழங்கக் கூடாது என காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகளைத் தவிர்ந்த ஏனைய சகல உதவிகளும் நிறுத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் சபை வலியுறுத்தியுள்ளது. நிலக்கண்ணி வெடி அகற்றுதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பரக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் சபை சிரேஸ்ட உறுப்பினர் ஹோவார்ட் பெர்மன் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். இலங்கை நிலைமைகள் தொடர்பில் அவதானித்து அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னரே உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுதல் ஆகியன தெடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2010ம் நிதியாண்டில் இலங்கைக்கான உதவிகளுக்காக 13 மில்லியன் அமெரிக்க டொலர் கோரப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், இலங்கைக்கு உதவிகள் நிறுத்தப்படும் தீர்மானம் உடனடியாக அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த யோசனைத் திட்டத்தை செனட் சபையும் அங்கீகாரம் செய்தால் மட்டுமே உதவிகளை நிறுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக