21 ஜூலை 2011

வீட்டுக்கு வாக்களியுங்கள்! தமிழ் மண்ணைக் காப்பாற்றுங்கள்!-ஐ.எம்.இம்தியாஸ்!

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து தங்கள் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்பது நிச்சயம். முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இம்தியாஸ் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய ஒரு சில அரசியல்வாதிகள் அரசின் ஊதுகுழலாய் இருப்பதைப் பார்த்து முழு முஸ்லிம் சமுகத்தையும் முழுமையாக எடைபோட்டுவிட முடியாது. இஸ்லாம் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு எப்பொழுதுமே உதவி வந்துள்ளது; குரல் கொடுத்து வந்துள்ளது.
தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர் இன்றும் கிழக்கிலே வாழ்ந்தும், மறைந்தும் உள்ளார்கள்.
அநியாய ஆட்சிக்கு எதிராகத் துணிந்து சத்தியத்தைச் சொல்லி மரணித்த தியாகிகளும் உள்ளனர். தமிழ் மக்கள் நிம்மதியுடனும், சுய மரியாதை, கெளவரம், சுய உரிமையுடனும் வாழவேண்டும் என்பதே முஸ்லிம் மக்களின் ஏகோபித்த முடிவாகும்.
நல்லதை ஏவி, தீயதைத் தடுக்கும் பணியில் நாம் முழுமையாக உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம். அப்பாவி மக்களைக் கொன்று குவித்தவன் முழுச் சமூகத்தையுமே அழித்தவனாகிறான். ஓர் அப்பாவியைக் காத்தவன் ஒரு நாட்டையும், சமூகத்தையும் காத்தவனாகிறான். உயிர்த் தியாகங்கள் செய்த அத்தனை நெஞ்சங்களின் சார்பில் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான வேண்டுகோள். வீட்டுக்கு வாக்களியுங்கள்! தமிழ் மண்ணைக் காப்பாற்றுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக