07 ஆகஸ்ட் 2011

இலங்கை வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர் விமானங்கள்!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர். அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின. ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்துப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று இலங்கையை அமெரிக்கா வற்புறுத்திவரும் நிலையில், அதன் போர் விமானங்கள் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக